மூளையை தூண்டிவிட்டு, கிதார் வாசிக்க வைத்து இளைஞரின் நரம்பு குறைப்பாட்டை சரி செய்த டாக்டர்கள்!
பெங்களூர்: எந்த நரம்பில் கோளாறு உள்ளது என்பதை கண்டறிய மூளையில் உள்ள செல்களை தூண்டி அதன் மூலம் இளைஞரை கிதார் வாசிக்க வைத்து அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் செய்துள்ளனர்.
பெங்களூரைச் சேர்ந்தவர் கிஷோர் (32) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் கிதார் கலைஞர். கிதாரை அதிகப்படியாக வாசித்ததால் அவரது இடது கையில் மூன்று விரல்கள் நரம்பியல் குறைப்பாட்டால் செயலிழந்தன.

இதைத் தொடர்ந்து அவர் கடந்த வாரம் பெங்களூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மூளையில் 7 மணி நேரம் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆபத்தான அறுவை சிகிச்சை குறித்து மருத்துவர்கள் கூறுகையில், கிஷோருக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கு முன்னர், அவரது தலையில் 4 ஸ்குருக்களை கொண்ட ஒரு சட்டத்தை பொருத்தினோம். அதைத் தொடர்ந்து எம்ஆர்ஐ பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.
எனினும் எந்த நரம்பில் பிரச்சினை என்பதை கண்டறிய அவரது மண்டை ஓட்டில் மயக்க மருந்து செலுத்தி 14மிமீ அளவுக்கு துளை போடப்பட்டது. இதைத் தொடர்ந்து சிறப்பு வாய்ந்த கரன்ட் ஷாக் மூலம் அவரது மூளை செல்கள் தூண்டிவிடப்பட்டன.
பின்னர் அவரை கிதார் வாசிக்க வைத்து அதன் மூலம் எந்த நரம்பில் குறைபாடு உள்ளது என்பது குறித்த சரியான இடத்தை கண்டறிய முடிந்தது. இந்த அறுவை சிகிச்சை சிறப்பாக மேற்கொள்ளப்பட்டது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட கிஷோர் கூறுகையில், நான் தற்போது நலமாக உள்ளேன். செயலிழந்து கிடந்த எனது விரல்கள் மீண்டும் கிதாரை வாசிப்பதை பார்க்கும் போது வியப்பாக உள்ளது. இந்த அறுவை சிகிச்சையால் நான் 100 சதவீதம் குணமடைந்துள்ளேன்.
முன்புபோல் என்னால் எனது விரல்களை இயக்க முடிகிறது. இன்னும் 3 நாட்களில் நான் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு திரும்பி மீண்டும் கிதாரை வாசிப்பேன் என்றார் கிஷோர்.












Click it and Unblock the Notifications