இப்பவே வெயில் கண்ணைக் கட்டுதே, இன்னும் மே இருக்கே: புலம்பும் பெங்களூர்வாசிகள்
பெங்களூர்: பெங்களூர் மக்கள் வெயிலின் கோரதாண்டவத்தை தாங்க முடியாமல் திணறி வருகிறார்கள்.
பூங்கா நகரமான பெங்களூரில் பெரும்பாலான இடங்களில் மரங்களை வெட்டிவிட்டு கட்டிடங்கள் கட்டி வருகிறார்கள். ஒரு காலத்தில் திரும்பும் பக்கம் எல்லாம் மரம், செடி, கொடிகளை பார்க்க முடிந்த பெங்களூரில் தற்போது கட்டிடங்களை தான் காண முடிகிறது.
தொடர்ந்து மரங்களை வெட்டி வருவதால் பெங்களூரில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.

காலை
காலையிலேயே அனல் காற்று வீசுவதால் அலுவலகம், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்பவர்கள் அவதிப்படுகிறார்கள். வெயில் கோரத்தாண்டவம் ஆடுவதால் பகல் நேரத்தில் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

முடியலையே
காலையில் எழுந்து குளித்துவிட்டு அலுவலகங்களுக்கு செல்வோர் சுட்டெரிக்கும் வெயிலால் வியர்த்து விருவிருத்து தொப்பலாக அலுவலகத்தை அடைகின்றனர். இப்பவே கண்ணைக் கட்டுதே இன்னும் மே மாதம் வேறு இருக்கே என்று மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

போக்குவரத்து நெரிசல்
பெங்களூர் எப்படி ஐடி நிறுவனங்களுக்கு பெயர் போனதோ அதே போன்று போக்குவரத்து நெரிசலுக்கும் பெயர் போனது தான். இந்நிலையில் காலையிலேயே சுட்டெரிக்கும் வெயிலில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளை அடையும் முன்பு மக்கள் நொந்து நூடூல்ஸாகிவிடுகிறார்கள்.

ஞானஉதயம்
சாலையில் வாகனத்தில் செல்கையில் எங்காவது நிழல் இருந்தால் ஆஹா, ஓஹோ என்று கூறும் மக்கள் மரங்களை வெட்டுவதன் பாதகத்தை தற்போது தான் உணரத் துவங்கியுள்ளனர். குளு குளு என இருந்த பெங்களூரில் பகல் வேளையில் அனல் காற்று வீசும் அளவுக்கு நிலைமை மோசமாகிவிட்டது.












Click it and Unblock the Notifications