ஜெ. சொத்துக் குவிப்பு வழக்கு கிளைமேக்ஸ்: திருடிய பணத்தில் வருமான வரி கட்டினால் ஏற்க முடியுமா?
பெங்களூரு: திருடன் ஒருவன் தான் திருடிய பணத்தை பாதுகாத்து கொள்வதற்காக வருமான வரி செலுத்தினால் ஏற்றுகொள்ள முடியுமா? என்று அரசு வழக்கறிஞர் பவானிசிங் கேள்வி எழுப்பினார்.சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற ஒரே முதல்வர் ஜெயலலிதா தான் என்றும் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் நான்காண்டுகள் சிறை தண்டனையும் நூறு கோடி ரூபாய் அபராதமும் பெற்றுள்ள ஜெயலலிதா, சசிகலா, இளவரசி சுதாகரன், ஆகியோர் தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சி.ஆர்.குமாரசாமி முன் நடைபெற்று வருகிறது.
வழக்கில் தொடர்புடைய ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய நான்கு பேர் தரப்பு வாதங்கள் முடிந்துவிட்டன. கம்பெனிகள் தரப்பு வாதங்களும் முடிந்துவிட்டன. வழக்கு விசாரணை கிளைமாக்ஸை எட்டியுள்ளது. விரைவில் தீர்ப்பு அறிவிக்கப்படலாம் என்று கூறப்படுவதால் போயஸ் கார்டன் வட்டாரத்தில் மீண்டும் திகில் பரவ ஆரம்பித்துள்ளது.
விடுமுறைக்குப் பின் விசாரணை
மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை கடந்த 35 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணையில் சிலநாட்கள் அரசு வழக்கறிஞரான பவானி சிங் விடுமுறை கேட்டார். இதை அடுத்து ஒத்திவைக்கப்பட்ட இந்த வழக்கு, நேற்று மீண்டும்
கம்பெனிகளுக்கு நிலங்கள்
வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளவர்கள் இயக்குனர் மற்றும் பங்குதாரர்களாக உள்ள மெடோ ஆக்ரோ பாரம் மற்றும் ரிவர்வே ஆக்ரோ பாரம் ஆகிய நிறுவனங்களுக்கு காஞ்சிபுரம் மாவட்டத்தில் 400 ஏக்கர் நிலமும், நெல்லை மாவட்டம், திருவைகுண்டம் தாலுகா, மீராகுளம் மற்றும் சேரகுளம் ஆகிய கிராமங்களில் ஆயிரத்து 300 ஏக்கர் நிலம் வாங்கியதாக தெரிவித்தார்.
ஜெயலலிதாவின் பணம்
மேலும் அந்த நிலம் வாங்குவதற்கான பணம் முதல் குற்றவாளியான ஜெயலலிதா வருமானத்திற்கு அதிகம் சேர்த்த பணத்தை பயன்படுத்தியதாகவும் தெரிவித்தார்.
பணம் கொடுப்பட்டதன் ஆதாரம்
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, நிலம் வாங்க முதல் குற்றவாளியின் பணம் எப்படி பயன்படுத்தப்பட்டது? நிலம் கொடுத்தவர்களுக்கு பணமாக கொடுக்கப்பட்டதா? அல்லது காசோலை, வங்கி வரையோலையாக கொடுக்கப்பட்டதா? அப்படி கொடுத்திருந்தால் அதற்கான ஆதாரங்கள் கொடுங்கள் என்றார். அதற்கு பதிலளித்த வழக்கறிஞர், என்னிடம் ஆதாரமுள்ளது. அதை எழுத்து பூர்வமாக தாக்கல் செய்கிறேன் என்றார்.
கணக்கு கொடுத்த ஜெ
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, நான் கேட்கும் எந்த கேள்விக்கும் உடனடியாக பதிலளிக்காமல், தாமதம் செய்கிறீர்கள், எந்த குற்றத்திற்கும் சட்டப்படியான ஆதாரமும், சாட்சி இருந்தால் மட்டுமே தீர்ப்பளிக்க முடியும்? இதை புரிந்துகொண்டு செயல்படுங்கள். மேலும் ஜெயலலிதா கடந்த 1971ம் ஆண்டு தன்னிடம் ரூ.1 லட்சம் மதிப்புள்ள சொத்து இருப்பதாக வருமானவரித்துறையிடம் கணக்கு கொடுத்துள்ளார்.
தாக்கல் செய்யவில்லை
மேலும் அவருக்கு வழக்கு காலத்திற்கு முன் எவ்வளவு சொத்து இருந்தது? வழக்கு காலம் மட்டும் அவரது பெயரில் இருந்த சொத்து எவ்வளவு? என்ற விவரம் தாக்கல் செய்யும்படி பலமுறை நான் கேட்டும், இரு தரப்பும் தாக்கல் செய்யவில்லை என்று அதிருப்தி தெரிவித்தார். மேலும் தேவையில்லாமல் சாட்சிகளின் வாக்குமூலத்தை படித்து நேரத்தை வீணடிக்க வேண்டாம். முக்கிய சாட்சிகளை மட்டும் எடுத்து கூறுங்கள் என்று கூறினார்.
டிவி நிறுவனம்
அதை தொடர்ந்து வக்கீல் பவானிசிங் சூப்பர்-டூப்பர் டி.வி. நிறுவனம் தொடர்பான சாட்சியை படித்தபோது, குறுக்கிட்ட நீதிபதி அரசியல் கட்சி தலைவர்கள் டி.வி.நிறுவனம் தொடங்குவது தவறா? அப்படி தவறு என்றால் அதற்கான காரணத்தை ஆதாரமாக கொடுங்கள் என்றார். அதற்கு பதிலளித்த வக்கீல் சிங், நாங்கள் டி.வி.சேனல் தொடங்கியதாக குற்றம்சாட்டவில்லை.
கேபிள் டி.வி. நிறுவனம் தொடங்கியதாக மட்டுமே கூறியுள்ளோம் என்றார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி இரண்டும் ஒன்று தான் என்றார்.
சொத்து வாக்கிய விபரம்
மேலும் ஜெயலலிதா உள்பட குற்றவாளிகள் தமிழகம், ஆந்திர மாநிலத்தில் நிலம் வாங்கியதாக கூறியுள்ளீர்கள். மும்பை, கொல்கத்தா மாநகரங்களில் ஏதாவது சொத்து வாங்கியுள்ளாரா? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு வக்கீல் சிங் இல்லை என்று பதிலளித்தார். மேலும் நான் கேட்கும் பல ஆவணங்களை கொடுக்கவில்லை.
தீர்ப்பு வழங்கப்பட்டது எப்படி?
தனி நீதிமன்றத்திலும் இப்படி தான் செயல்பட்டீர்களா? போதிய ஆதாரங்களை பரிசீலிக்காமல் தனிநீதிமன்றம் சந்தேகத்தின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கியதா? என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, கம்பெனிகளை சொத்து குவிப்பு வழக்கில் சேர்க்கப்பட்டதற்கான காரணத்தை தெளிவாக கூறுங்கள் என்றார். மேலும் தனிநீதிமன்றத்தில் தி.மு.க. பொதுசெயலாளர் க.அன்பழகன் சார்பில் எழுத்து பூர்வமாக தாக்கல் செய்த ஆவணங்களை டிவிஏசி அதிகாரிகளிடம் கேட்டு பெற்றுகொண்டார்.
வேறு யாருக்காவது தண்டனை
விசாரணையின் போது குறுக்கிட்ட நீதிபதி, இந்திய ஊழல் தடுப்பு சட்டம் 1988, 13 (1) (இ) பிரிவின் கீழ் நாட்டில் எந்த மாநில முதல்வர்களோ அல்லது அமைச்சர்களோ வருமானத்திற்கு அதிகம் சொத்து சேர்த்த வழக்கு தொடுத்து தண்டனை வழங்கப்பட்டுள்ளதா? என்று கேட்டார்.
ஜெயலலிதா மட்டுமே
அதற்கு பதிலளித்த வக்கீல் பவானிசிங், இதற்கு முன் உத்தரப்பிரதேச மாநில முதல்வராக இருந்த மாயாவதி மீது வருமானத்திற்கு அதிகம் சொத்து சேர்த்தாக வழக்கு தொடரப்பட்டது. ஆனால், போதிய சாட்சி, ஆதாரமில்லாததால் தள்ளுபடி செய்யப்பட்டது. முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்மராவ் மீது லஞ்சம் வாங்கியதாக புகார் வந்தும் தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால், நாட்டில் வருமானத்திற்கு அதிகம் சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டு தண்டனை பெற்ற ஒரே முதல்வர் ஜெயலலிதா மட்டுமே என்றார்.
திருடன் திருடிய பணம்
தொடர்ந்து வாதிட்ட பவானிசிங், நமது எம்.ஜி.ஆர் நிறுவனத்திற்காக சந்தா மூலம் ரூ.14 கோடி திரட்டியதாக குற்றவாளிகள் தரப்பில் சொல்வது சட்ட விரோதமானது. சந்தா வசூலிக்க வேண்டுமானால் முறைப்படி இந்திய ரிசர்வ் வங்கியிடம் அனுமதி பெற வேண்டும். அதை செய்யவில்லை. மேலும் திரட்டிய பணத்திற்கான வருமான வரியை வழக்கு காலத்தில் செலுத்தியுள்ளனர். திருடன் ஒருவன் தான் திருடிய பணத்தை பாதுகாத்து கொள்வதற்காக வருமான வரி செலுத்தினால் ஏற்றுகொள்ள முடியுமா? என்று கேள்வி எழுப்பினார்.
தீர்ப்பு எப்போது?
பவானிசிங்கின் வாதம் இன்றும் தொடர்கிறது. அவரது வாதம் முடிந்த பின்னர், நீதிமன்றத்தை நீதிபதி ஒத்தி வைக்கலாம். கர்நாடக உயர் நீதிமன்ற விதிமுறைகளின்படி ஒரு வழக்கின் விசாரணை முடிந்த 14 நாட்களுக்குள் தீர்ப்பை அளித்தாக வேண்டும் என்பது முக்கிய விதி. இதைச் சொல்லித்தான் சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா தனது தீர்ப்பை விரைந்து அளித்தார். அதேபோல் நீதிபதி குமாரசாமியும் தனது தீர்ப்பை விரைந்து அளிக்கத் திட்டமிட்டுள்ளாராம். அநேகமாக மார்ச் இறுதிக்குள் தீர்ப்பு வாசிக்கப்படலாம் என்று பெங்களூரு நீதிமன்ற வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
தடைகள் என்ன?
அரசு வழக்கறிஞராக இருக்கும் பவானி சிங்கை நீக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தி.மு.க பொதுச்செயலாளர் அன்பழகன் தாக்கல் செய்திருந்த மனு வரும் 9-ம் தேதி விசாரணைக்கு வருகிறது. அதேபோல சொத்துக் குவிப்பு வழக்கின் தண்டனையை எதிர்க்கும் மேல்முறையீட்டு விசாரணையை ஒத்திவைக்கக் கோரியும் க. அன்பழகன் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.
உச்சநீதிமன்றத்தில் விசாரணை
உச்ச நீதிமன்றம் கூறும் தீர்ப்பை பொறுத்து இந்த வழக்கின் போக்கு மாற வாய்ப்புள்ளது. ஒருவேளை பவானி சிங்கை மாற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சொல்லிவிட்டால், புதிய அரசு வழக்கறிஞர் வந்து, வாதங்களை வைத்து, அவரிடம் நீதிபதி கேள்விகளைக் கேட்டு மீண்டும் காலதாமதம் ஆக வாய்ப்பு உள்ளது. உச்சநீதிமன்றம் எந்த தடையையும் போடவில்லை எனில் மார்ச் இறுதிக்குள் தீர்ப்பு வருவதில் எந்தச் சிக்கலும் இருக்காது என்றும் கூறப்படுகிறது. எனவே தீர்ப்பை எண்ணி மீண்டும் திகிலடித்துப்போயுள்ளது போயஸ்கார்டன்.