ராமர் கோவில் பூமி பூஜை : டிவி சேனல்களுக்கு ஏக கட்டுப்பாடு விதித்த அயோத்தி மாவட்ட நிர்வாகம்
அயோத்தியில் ராமர்கோவில் பூமி பூஜை நடத்துவது பற்றி டிவி சேனல்களில் எந்த சர்ச்சைக்குரிய விவாத நிகழ்ச்சிகளை நடத்த வேண்டாம் என்று அயோத்தி மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும
அயோத்தி: ராமர்கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற உள்ளதால் டிவி சேனல்களில் சர்ச்சைக்குரிய விவாத நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது என்று அயோத்தி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. எந்தவொரு மதம், சமூகம் அல்லது பிரிவு, அல்லது எந்தவொரு குறிப்பிட்ட தனிநபர் குறித்தும் எந்தக் கருத்தும் பேசக் கூடாது என்றும் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் வழக்கு பற்றி பேசக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
அயோத்தியில் ராமருக்கு கோவில் கட்டுவதற்காக ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி பூமி பூஜை நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பாஜக, ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட அமைப்பினர்களுக்கு கட்சியினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதோடு முஸ்லிம் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
உத்திரபிரதேச மாநில சன்னி மத்திய வக்பு வாரிய தலைவர் சஃபர் ஃபரூக்கி, ஷியா வக்பு வாரியத் தலைவர் வாசிம் ரிஸ்வி, அயோத்தி நில விவகார வழக்கில் மனுதாரரான இக்பால் அன்சாரி ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளனர். எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் தங்கள் வருகையை உறுதி செய்துள்ளனர்.
ஆர்எஸ்எஸ் தலைவர் மோஹன் பாகவத், பொதுச் செயலர் சுரேஷ் பையாஜி ஜோஷி, யோகா குரு பாபா ராம்தேவ் ஆகியோரும் அழைக்கப்பட்டுள்ளனர். பிரதமர் மோடியும் ஆர்.எஸ்.எஸ். தலைவரும் ஒரே நிகழ்ச்சியில் பங்கேற்பது இதுவே முதல் முறையாகும்.
வரலாற்று சிறப்பு மிக்க இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அரசியல் கட்சிகளுக்கு அழைப்பிதழ் அனுப்பவில்லை, ஏனெனில் கட்சிகளிடையே பேதம் காட்ட விரும்பவில்லை, ராமர் அனைவருக்கும் பொதுவானவர் என்பதால் இருந்த இடத்தில் இருந்தே எல்லோரும் வணங்குங்கள் என்று கூறியுள்ளார் அறக்கட்டளை பொருளாளர் ஸ்வாமி கோவிந்த் தேவ் கிரி.
மும்பையில் ஸீரோ ஆய்வு...கொரோனா பரவல்...குடிசையில் 57%... அடுக்குமாடி குடியிருப்பில் 16%!!
ராமர் கோவில் அறக்கட்டளை செயலர் சம்பத் ராய் பேசும் போது பூமி பூஜையின் போது, ராமர் விக்ரஹத்துக்கு, நவரத்தின கற்களால் தயாரிக்கப்பட்ட உடை அணிவிக்கப்படும். ராமர் விக்ரஹத்துக்கு பகவத் பாரி என்ற டெய்லர் தான், இந்த உடையை தயாரிக்கிறார். இவரது குடும்பத்தினர் தான், பாரம்பரியமாக ராமர் விக்ரஹத்துக்கு உடை தயாரிக்கின்றனர் என்று கூறியுள்ளார்.
இதனிடையே ராமர்கோவில் பூமி பூஜை தொடர்பாக நடைபெறும் நிகழ்ச்சிகளை அயோத்தியில் இருந்து ஒளிபரப்பும் சேனல்களுக்கு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது மாவட்ட நிர்வாகம். இது குறித்து அயோத்தி மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
செய்தி சேனல்களில் ராமர் கோவில் பூமி பூஜை தொடர்பாக அயோத்தியில் இருந்து நேரடி ஒளிபரப்பு செய்ய விரும்பினால் முன் அனுமதி பெற வேண்டும். அந்த நிகழ்ச்சியில் அயோத்தி வழக்கு பற்றி சர்ச்சைக்குரிய விஷயங்களை பேச கூடாது. சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்யக்கூடாது. டிவி சேனல் ஊழியர்கள் கொரோனா தடுப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
டிவி சேனல் விவாதம் காரணமாக சட்டம் ஒழுங்கு நிலைமை பாதிப்பு ஏற்பட்டால் அந்த டிவி சேனல் தலைவர்கள் பொறுப்பு ஏற்க வேண்டும். சட்டம் ஒழுங்கு பராமரிக்கப்படும் என்றும் அசம்பாவிதங்கள் நிகழ்ந்தால் அது எனது பொறுப்பு என்று ஊடக நிறுவன தலைவர்கள் கையெழுத்து போட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு சர்ச்சைக்குரிய நபர்கள் யாரும் அழைக்கப்பட மாட்டார்கள் என்ற உத்தரவாதத்தையும் அளிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.