"நிதிஷ் குமார் எனும் நான்" நவம்பர் 20ல் பீகார் முதல்வராக பதவியேற்பு .. எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு
பாட்னா: பீகார் சட்டசபைத் தேர்தலில் என்டிஏ கூட்டணி 202 தொகுதிகளை வென்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ள நிலையில், நிதிஷ் குமார் 10வது முறையாக நாளை மறுநாள் பதவியேற்க உள்ளார். ஏற்கனவே சட்டசபையை கலைப்பதற்கான பரிந்துரை கடிதத்தை நிதிஷ் குமார் அளித்துள்ள நிலையில், நாளை முறைப்படி சட்டசபை கலைக்கப்பட உள்ளது.
பீகார் மாநில சட்டசபைத் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. நவம்பர் 6ஆம் தேதி முதற்கட்டமாக 121 தொகுதிகளுக்கும், நவம்பர் 11ஆம் தேதி 2ஆம் கட்டமாக 122 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நவம்பர் 14ஆம் தேதி எண்ணப்பட்டன. அதில் என்டிஏ கூட்டணி 202 தொகுதிகளில் வென்று ஆட்சியை தக்க வைத்து கொண்டுள்ளது.

இதனால் நாடு முழுவதும் பாஜகவின் உற்சாகத்தில் உள்ளனர். இந்த நிலையில் நாளை மறுநாள் (நவம்பர் 20) காலை 10 மணிக்கு நிதிஷ் குமார் பீகார் மாநில முதல்வராக பதவியேற்க உள்ளார். பீகார் மாநிலத்தின் முதல்வராக 10வது முறையாக நிதிஷ் குமார் பதவியேற்க இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் இந்த பதவியேற்பு விழா பிரம்மாண்டமாக நடக்கவுள்ளது.
இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், கூட்டணி கட்சித் தலைவர்கள் உட்பட பலரும் பங்கேற்க உள்ளனர். தமிழ்நாட்டில் இருந்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு பதவியேற்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நிதிஷ் குமார் அமைச்சரவையில் பாஜகவிற்கு 16 பேருக்கும், ஜேடியூவில் 14 பேருக்கும் இடம் அளிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இருந்தாலும் சபாநாயகர் பதவி விவகாரத்தில் ஜேடியூ மற்றும் பாஜக இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. கடந்த ஆட்சியில் பாஜகவின் கிஷோர் யாதவ் சபாநாயகராக செயல்பட்டார். நம்பிக்கை வாக்கெடுப்பின் போது சபாநாயகர் பதவி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். இம்முறை பாஜக அதிக இடங்களில் வென்றுள்ளதால், சபாநாயகர் பதவியை கைப்பற்ற ஜேடியூ தீவிரமாக முயற்சித்து வருகிறது.
இதனிடையே சட்டசபையை கலைப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, முதல்வர் நிதிஷ் குமார் பீகார் ஆளுநர் ஆரிப் முகமது கானை சந்தித்து பரிந்துரை கடிதத்தை அளித்தார். இதையடுத்து முறைப்படி நாளை சட்டசபை கலைக்கப்பட உள்ளது. தொடர்ந்து 20 ஆண்டுகளாக பீகார் முதல்வராக நிதிஷ் குமார் இருப்பதன் மூலமாக பல்வேறு சாதனையை முறியடித்துள்ளார். குறிப்பாக ஜோதி பாசு, நவீன் பட்நாயக் ஆகியோரின் நீண்ட கால முதல்வர் என்ற சாதனையை சமன் செய்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications