இடதுசாரிகளின் எழுச்சி.. பீகார் தேர்தலால் மமதா கண்முன் வந்த பிளாஷ்பேக்.. எதிர்பார்க்காத டிவிஸ்ட்!
கொல்கத்தா: பீகார் சட்டசபை தேர்தலில் இடதுசாரிகள் அதிக இடங்களில் வென்று இருப்பதை பார்த்து பாஜக அச்சம் கொள்வதை விட... மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜிதான் அதிக அச்சம் கொண்டு இருக்கிறார். இவரின் அச்சத்திற்கு முக்கிய காரணம் இருக்கிறது.
பீகார் சட்டசபை தேர்தலில் பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசிய ஜனநாயக கூட்டணி மாபெரும் வெற்றியை பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. பாஜக - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி 125 இடங்களில் வென்று மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது.
காங்கிரஸ் - ஆர்ஜேடி கூட்டணி வெறும் 110 இடங்களில் வென்று உள்ளது. ஆட்சி அமைக்க 122 இடங்கள் தேவை என்ற நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை பெற்றுள்ளது.
மாப்பிள்ளை நிதீஷ்தான்.. ஆனால் ஆட்சி நடத்த போவது இவங்கதான்... கலகலக்க போகும் பீகார்!
எப்படி
இந்த தேர்தலில் அதிகம் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்று பார்த்தால் அது இடதுசாரிகளின் வெற்றிதான். காங்கிரஸ் - ஆர்ஜேடியின் மகாபந்தன் கூட்டணியில் போட்டியிட்ட இடதுசாரிகள் இந்த தேர்தலில் நினைத்து பார்க்க முடியாத வெற்றியை பெற்றுள்ளனர். 29 இடங்களில் இடதுசாரிகள் இந்த தேர்தலில் போட்டியிட்டனர்.
இடதுசாரிகள்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 4 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 6 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் லிப்ரெஷன் கட்சி 19 இடங்களிலும் போட்டியிட்டது. மொத்தமாக 29 இடங்களில் இந்த மூன்று கட்சிகள் போட்டியிட்டது. இதில் இடதுசாரிகள் மொத்தமாக 16 இடங்களில் வென்றுள்ளனர்.
வெற்றி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 3 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் லிப்ரெஷன் கட்சி 11 இடங்களிலும் இந்த தேர்தலில் வென்றுள்ளது. மொத்தமாக போட்டியிட்ட தொகுதிகளில் 50%க்கும் அதிகமான இடங்களில் இடதுசாரிகள் வென்றுள்ளனர். ஆர்ஜேடி கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் இவர்களை விட 3 இடங்கள்தான் கூடுதலாக வென்றுள்ளனர்... அதுவும் கூட 27% வெற்றி விகிதத்துடன்.!
எங்கே வென்றனர்
இடதுசாரிகள் பீகாரில் வென்று இருக்கும் பெரும்பாலான இடங்கள்.. மேற்கு வங்கத்திற்கு அருகில் இருக்கும் தொகுதிகள் ஆகும். 16 தொகுதியில் 11 தொகுதிகள் மேற்கு வங்கத்திற்கு அருகே இருக்கும் தொகுதிகள் ஆகும். மீதம் இருக்கும் தொகுதிகள் உத்தர பிரதேசம் அருகே உள்ள இடங்கள் ஆகும். இடதுசாரிகள் இப்படி மேற்கு வங்கத்திற்கு அருகே இருக்கும் தொகுதிகளில் வென்றுள்ளதால் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி ஒரு பக்கம் கலக்கத்தில் உள்ளார்.
ஏன்
மேற்கு வங்கத்தில் மமதாவின் திரிணாமுல் ஆதிக்கம் செலுத்தும் முன்.. அங்கு இடதுசாரிகள்தான் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். அவர்களின் ஆதிக்கத்தை வீழ்த்த மமதா நிகழ்த்திய போராட்டங்கள்தான் அவரை தலைவராக முன்னிறுத்தியது. மேற்கு வங்கத்திலும் தற்போது இடதுசாரிகளின் ஆதிக்கம் குறைந்துவிட்டது என்று மமதா கருதிய நிலையில் எல்லையோர தொகுதிகளில் இடதுசாரிகள் வென்று இருப்பது.. மமதாவிற்கு கொஞ்சம் பீதியை கிளப்பி உள்ளது.
வாக்கு பிரியும்
மேற்கு வங்கத்தில் இடதுசாரிகள் மீண்டும் எழுச்சி பெறுவதற்கான அறிகுறியாக இது பார்க்கப்படுகிறது. மமதானா வேண்டாம், பாஜக வேண்டும் என்று கருதும் நபர்கள் மீண்டும் இடதுசாரிகள் பக்கம் செல்ல வாய்ப்புள்ளது. இடதுசாரிகள் இழந்த கோட்டையை மீண்டும் பிடிக்க வாய்ப்புள்ளது.
மேற்கு வங்கம்
மேற்கு வங்கத்தில் இடதுசாரிகள் வென்று ஆட்சி அமைக்க வாய்ப்பு இல்லை. ஆனால் இடதுசாரிகளின் எழுச்சி.. மம்தாவிற்கு செல்லும் ஆதரவு வாக்குகளை பிரிக்கும். இது ஒரு வகையில் பாஜகவிற்கு சாதகமாக வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே மேற்கு வங்கத்தில் வளர்ந்து வரும் பாஜக மமதாவை வீழ்த்துவது இதனால் இன்னும் எளிதாகும்.. இடதுசாரிகளின் திடீர் எழுச்சி.. திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு தலைவலியாக உருவெடுத்துள்ளது.