பீகார் சட்டசபை தேர்தல்: ஐ.ஜனதா தளம்- ஆர்.ஜே. டி தலா 100 இடங்களில் போட்டி!!
பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலில் முதல்வர் நிதிஷ்குமாரின் ஆளும் ஐக்கிய ஜனதா தளமும் லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளமும் தலா 100 தொகுதிகளில் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதர 40 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது.
243 தொகுதிகளைக் கொண்ட பீகார் மாநில சட்டசபைக்கு ஓரிரு மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் பாரதிய ஜனதா தலையெடுத்துவிடக் கூடாது என்பதற்காக முதல்வர் நிதிஷ்குமார், ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத் யாதவுடன் கை கோர்த்துள்ளார்.
'Swabhimaan rally' to be held at Gandhi Maidan in Patna on 30th August: Lalu Prasad Yadav pic.twitter.com/peqH7aAQJk
— ANI (@ANI_news) August 12, 2015
இவர்களுடன் காங்கிரஸ் கட்சியும் கூட்டணியில் இணைந்துள்ளது. ஐக்கிய ஜனதா தளம் மற்றும் ஆர்.ஜே.டி. கட்சிகளிடையே தொகுதிப் பங்கீட்டில் நீண்ட முட்டுக்கட்டை நீடித்து வந்தது. இதனால் இரு கட்சிகளிடையே கூட்டணி நீடிக்குமா என்ற கேள்வியும் எழுந்திருந்தது.
இந்த நிலையில் பாட்னாவில் இன்று செய்தியாளர்களை நிதிஷ்குமாரும் லாலுபிரசாத் யாதவும் கூட்டாக சந்தித்தனர். அப்போது தங்களது கூட்டணியில் தொகுதிப் பங்கீடு சுமூகமாக நடைபெற்றுள்ளதாகவும் ஐக்கிய ஜனதா தளமும் ராஷ்டிரிய ஜனதா தளமும் தலா 100 தொகுதிகளில் போட்டியிடும் என்றும் அறிவித்தனர்.
மேலும் தங்களது கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு 40 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் இருவரும் தெரிவித்தனர்.
அத்துடன் தங்களது கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக நிதிஷ்குமாரையே முன்னிறுத்துவோம் என்றும் லாலு பிரசாத் யாதவ் கூறினார்.