கடும் குளிரைத் தாங்க முடியாமல் சுருண்டு விழுந்து இறந்த மணமகள்.. திருமண நாளன்று சோகம்
பாட்னா: பீகாரில் அதிக குளிர் தாங்காமல் திருமண நாளன்று மணமகள் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் பாக்தியர்பூர் பகுதியில் கடந்த 13ம் தேதி சோனி என்ற பெண்ணுக்கும், கயானந்த் குமார் என்ற இளைஞருக்கும் திருமணத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. திருமணத்திற்கான மற்ற சடங்குகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, மணமேடையிலேயே திடீரென சோனி மயங்கி விழுந்தார்.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த திருமண வீட்டார், உடனடியாக அவரை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள், அதிக குளிர் காரணமாக அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதைக் கேட்டு பெண் வீட்டார் மற்றும் மாப்பிள்ளை வீட்டார் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். திருமண வீடே சோகமயமானது.
அப்போது மணமகன் குமார், சோனியின் உடலை தங்களது வீட்டிற்கு கொண்டு சென்று இறுதி சடங்கு செய்ய விரும்புவதாக தெரிவித்தார். இதற்கு சோனி வீட்டாரும் சம்மதித்தனர்.
அதனைத் தொடர்ந்து சோனி உடல், குமாரின் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு உரிய இறுதி சடங்குகளுக்குப் பின் எரியூட்டப்பட்டது. பின்னர் சோனியின் அஸ்தியை குமார் கங்கையில் கரைத்தார்.
பல இடங்களில் திருமணமாகி பல ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த கணவர்களே சமயங்களில் மனைவிக்கு இறுதி சடங்கு செய்ய தயங்கும் நிலையில், திருமணத்திற்கு முன்பே இறந்து போன பெண்ணிற்கு குமார் இறுதிச் சடங்குகளைச் செய்தது நெகிழச் செய்வதாக இருந்ததாக சோனியின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
வட மாநிலங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது. வட மாநிலங்கள் அனைத்தும் பெரும் சிரமத்தையும் சந்தித்து வருகின்றன. பலர் உயிரிழந்து வருகின்றனர் என்பது நினைவிருக்கலாம்.