ஒடிஷா பூரி ஜெகந்நாதர் கோவில் சாவியை கண்டுபிடிச்சுதான் கொடுங்க.. மோடிக்கு விகே பாண்டியன் பதிலடி!
புவனேஸ்வர்: ஒடிஷாவின் பூரி ஜெகந்நாதர் கோவில் சாவி குறித்து கேள்வி எழுப்புகிற பிரதமர் மோடி தமக்கு கீழே உள்ள அதிகாரிகள் மூலமாக அதனை கண்டுபிடித்து ஒடிஷா மக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என பிஜூ ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவரான விகே பாண்டியன் பதிலடி கொடுத்துள்ளார்.
ஒடிஷாவில் லோக்சபா தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் நடைபெறுகிறது. ஒடிஷாவில் 25 ஆண்டுகளாக பிஜூ ஜனதா தளம்தான் ஆட்சியில் இருந்து வருகிறது. முதல்வர் நவீன் பட்நாயக்கின் வலதுகரமாக அரசில் பணியாற்றிய தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி, தற்போது பிஜூ ஜனதா தளத்தின் முக்கிய தலைவராகவும் உருவெடுத்துள்ளார்.

இதனால் ஒடிஷாவில் தேர்தல் பிரசாரம் செய்யும் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் விகே பாண்டியனை குறிவைத்து கடுமையாக விமர்சித்து வருகின்றனர். பிரதமர் மோடி பேசுகையில், பூரி ஜெகந்நாதர் கோவில் கருவூலத்தின் சாவி எங்கே என்பதில் ஒடிஷா மக்கள் ஆளும் அரசு மீது கோபமாக உள்ளனர். அந்தக் கருவூல அறையின் சாவி தமிழ்நாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டுவிட்டதா?தமிழ்நாட்டுக்கு அனுப்பியவர்கள் யார்? தமிழ்நாட்டுக்கு பூரி ஜெகந்நாதர் கோவில் கருவூல சாவியை அனுப்பியவர்களை மன்னிப்பார்களா மக்கள்? என பேசியிருந்தார்.
பிரதமர் மோடியின் இந்த விமர்சனத்துக்கு தமிழ்நாட்டு தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின், ஜெகந்நாதர் மீது அளவற்ற பக்தி கொண்ட ஒடிஷா மக்களைத் தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராகத் தூண்டும் பேச்சல்லவா இது? ஆலயத்தின் பொக்கிஷத்தைக் களவாடும் திருடர்கள் என்ற பழியைத் தமிழ்நாட்டு மக்கள் மீது பிரதமர் மோடி சுமத்தலாமா? தமிழ்நாட்டு மக்களை நேர்மையற்றவர்கள் என்று கூறுவது, தமிழ்நாட்டை அவமதிப்பது அல்லவா? என்று சாடியிருந்தார்.
இந்த நிலையில் பிரதமர் மோடியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள விகே பாண்டியன், பூரி ஜெகந்நாதர் கோவில் கருவூலத்தின் சாவி எங்கே என்பதை தமக்கு கீழே உள்ள அதிகாரிகளை வைத்து மோடி கண்டுபிடித்து ஒடிஷா மக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றார்.
பூரி ஜெகந்நாதர் கோவில் கருவூல அறையின் சாவியை காணவில்லை என மாவட்ட நிர்வாகம் முதலில் தெரிவித்திருந்தது. பின்னர் மாற்று சாவி கிடைத்துவிட்டதாகவும் மாவட்ட நிர்வாகம் கூறியது. இது தொடர்பாக விசாரணைகளும் நடத்தப்பட்டன.












Click it and Unblock the Notifications