"நல்லா சாப்பிட்டு கவனமா இருங்க.." ஜெகநாதனர் மோடியின் பக்தர் என்ற பத்ராவுக்கு விகே பாண்டியன் பதிலடி
புவனேஸ்வர்: புரி ஜெகநாதர் பிரதமர் மோடியின் பக்தர் என்று பாஜகவின் சம்பித் பத்ரா கூறியது சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், இதற்கு பிஜு ஜனதா தளத்தில் விகே பாண்டியன் பதிலடி கொடுத்துள்ளார்.
ஒடிசாவில் உள்ள உலக புகழ்பெற்ற கோயில் என்றால் அது பூரி ஜெகநாதர் ஆலயம். ஒவ்வொரு ஆண்டும் உலகெங்கும் இருந்தும் பல லட்சம் பேர் இந்த கோயிலுக்கு வந்து செல்வார்கள்.

இந்த பூரி ஜெகநாதர் குறித்து பாஜகவின் சம்பித் பத்ரா கூறிய கருத்துகள் சர்ச்சையானது. அதாவது பிரதமர் மோடியின் பக்தர் தான் பூரி ஜெகநாதர் என்று சம்பித் பத்ரா கூறியது சர்ச்சையானது.
உண்ணாவிரதம்: இவரது பேச்சுக்கு பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களும் அவரது பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். தான் தெரியாமல் வாய் தவறிப் பேசிவிட்டதாக சம்பித் பத்ரா மன்னிப்பு கேட்டுவிட்டார். மேலும், தான் செய்த தவறுக்காக உண்ணாவிரதம் இருக்கப் போவதாகவும் அறிவித்தார். இதற்கிடையே ஒடிசாவில் ஆளும் கட்சியான பிஜேடியின் முக்கிய தலைவரான வி.கே.பாண்டியன் இந்த விவகாரத்தில் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்,
அதாவது ஜெகநாதனிடம் மன்னிப்பு கோரும் பாஜக தலைவர் சம்பித் பத்ரா உண்ணாவிரதம் இருக்கத் தேவையில்லை என்றும் நன்கு சாப்பிட்டு கவனமாக இருக்க வேண்டும் என்றார். ஒடிசாவில் தேர்தலுக்கு சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், உண்ணாவிரதம் என பத்ரா மயங்கிவிடக்கூடாது என்றும் விகே பாண்டியன் தெரிவித்தார்.
விகே பாண்டியன்: இது தொடர்பாக ஏஎன்ஐ நிறுவனத்திடம் வி.கே.பாண்டியன் கூறுகையில், "இங்கு வெப்பமும் தூசும் அதிகமாக இருப்பதால் அவர் கவனமாக இருக்க வேண்டும். என்னைக் கேட்டால் நான் அவரை (பத்ரா) நன்கு சாப்பிட்டு கவனமாக இருக்க வேண்டும் என்பேன்.. தேர்தலுக்கு சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், அவர் மயங்கிவிடக்கூடாது.. அவரே ஒரு மருத்துவர்தான்.. எனவே இது அவருக்கே தெரியும்" என்றார்.
இந்த விவகாரத்தை பிஜு ஜனதா தளம் பெரிய பிரச்சினையாக எடுத்துச் செல்லுமா என்ற கேள்விக்கு அவர், "ஜெகநாதர் எப்போதும் எல்லாவற்றுக்கும் மேலாக இருக்க வேண்டும். மதத்தின் அடிப்படையில் அரசியல் செய்வதில் பிஜு ஜனதா தளத்திற்கு ஒருபோதும் நம்பிக்கை இல்லை. குறிப்பாக ஜெகநாதரை வைத்து நாங்கள் எப்போதும் அரசியல் செய்ய மாட்டோம்.
மதத்தை வைத்து அரசியல்: பாஜகதான் ஜெகநாதரை தேர்தல் பரப்புரைகளில் பேசுகிறார்கள். ஆனால் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் கடவுளை வைத்து அரசியல் செய்யக்கூடாது என்று நினைக்கிறார். இறைவனுக்கு அழிவே இல்லை.. மனிதர்கள் சில காலத்தில் அழிந்து விடுவார்கள்.. அப்படி இருக்கும் போது மனிதர்களாகிய நாம் இறைவனைப் பற்றிப் பேச வேண்டும்.
விருப்பமில்லை: தேர்தலுக்காக ஜெகநாதர் வைத்து அரசியல் செய்வதைக் கேட்டு நவீன் பட்நாயக் உண்மையிலேயே வருத்தம் அடைந்துள்ளார்.. அவருக்கு இது கஷ்டமாக இருக்கிறது. ஒடிசா மக்கள் தேர்தலில் மதத்தையோ அல்லது ஜெகநாதரையோ இழுப்பதை விரும்புவதில்லை. அதேநேரம் பாஜக இதுபோல செய்வது இது முதல் முறை இல்லை.. ஏற்கனவே 2019 உள்ளாட்சி தேர்தல் சமயத்திலும் அவர்கள் இதையே தான் செய்தார்கள். அவர்கள் எப்போதும் மதம் அல்லது கெஜநாதரை வைத்தே அரசியல் செய்கிறார்கள். இதுதான் அவர்களின் அரசியல் வியூகம்" என்று அவர் தெரிவித்தார்.
மன்னிப்பு: பாஜகவின் சம்பித் பத்ரா ஏற்கனவே தனது பேச்சுக்கு மன்னிப்பு கோரிவிட்டார். பிரதமர் மோடி ஜெகநாதரின் பக்தர் எனச் சொல்வதற்குப் பதிலாகத் தெரியாமல் ஜெகநாதர் மோடியின் பக்தர் எனக் கூறிவிட்டதாக விளக்கமளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications