திரிபுராவில் ஒன்றுகூடிய பழங்குடி கட்சிகள்.. வைக்கும் டிமாண்டோ பெருசு.. பாஜக ஷாக்!
திரிபுரா: அரச குடும்பத்தைச் சேர்ந்த பிரத்யோத் மாணிக்ய தேப் பர்மன், ஆளும் திரிபுரா பழங்குடி மக்கள் முன்னணி கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளார்.
அகர்தலா, வடகிழக்கு மாநிலமான திரிபுரா காங்கிரஸ் தலைவரான பிரத்யோத் கிஷோர் மாணிக்ய தேப் பர்மன், கட்சி தலைமை மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக, தன் பதவியை கடந்த 2019ம் ஆண்டு ராஜினாமா செய்தார்.
'திரிபுராவில், தேசிய குடிமக்கள் பதிவேடு கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற என் கோரிக்கையை திரும்ப பெற வலியுறுத்தியதற்கு நான் ஒப்புக் கொள்ளவில்லை. எனவே, காங்கிரஸில் வகித்து வந்த, மாநில தலைவர் பதவி உட்பட, அனைத்து பொறுப்பில் இருந்தும் விடுவித்துக் கொள்கிறேன்' என்று தெரிவித்திருந்தார்.
ஒத்திவைப்பு
இந்நிலையில், திரிபுராவில் பாஜகவுடன் கூட்டணி வைத்து ஆளும் திரிபுரா பழங்குடி மக்கள் முன்னணி கட்சியுடன், பழங்குடியினர் சபை தேர்தலை முன்னிட்டு அவர் கூட்டணி அமைத்துள்ளார். கடந்த ஆண்டு மே 17ம் தேதி தேர்தல் நடந்திருக்க வேண்டியது. கொரோனா தொற்று காரணமாக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
சங்கமித்த கட்சிகள்
குறிப்பாக, பிரத்யோத் கிஷோர் மாணிக்ய தேப் பர்மன் தலைமையில் தான் திரிபுரா பழங்குடி பகுதிகள் தன்னாட்சி மேம்பாட்டு கவுன்சில் (TTAADC) தேர்தலில் போட்டியிட உள்ளனர். Tipraland மாநில கட்சி, ஆளும் திரிபுரா பழங்குடி மக்கள் முன்னணி கட்சியுடன் (IPFT) சங்கமித்துள்ளதாக 42 வயதான பிரத்யோத் மாணிக்ய அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.
ஆட்சி பத்திரம்
ஏறக்குறைய அனைத்து முக்கிய பழங்குடி அரசியல் கட்சிகளும் TIPRA-வுடன் இணைந்துள்ளதால், பாஜக அதிர்ச்சி அடைந்துள்ளது. எனினும், பாஜகவுடன் இணைந்து ஆட்சி நடத்தும் பிப்லப் தேப் தலைமையிலான IPFT கட்சி, ஆட்சி கூட்டணியில் இருந்து பின்வாங்கவில்லை.
செய்தியாளர்கள் சந்திப்பு
IPFT தலைவரும் மாநில வருவாய்த்துறை அமைச்சருமான என்.சி தேப்பர்மா மற்றும் TIPRA தலைவர் பிரத்யோத் மாணிக்ய தேப் பர்மன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த போது, "வரவிருக்கும் பழங்குடியினர் சபை தேர்தல்களில் போட்டியிடுவதற்காக மட்டுமல்ல.. மாநிலத்தின் பழங்குடி சமூகத்தின் வளர்ச்சிக்காகவும் இந்த கூட்டணி இணைந்துள்ளது என்று கூறியுள்ளனர்.
ஒரேயொரு கையெழுத்து
எனினும், ஒரு தனி பழங்குடி மாநிலத்தை உருவாக்குவதற்கான கோரிக்கையை ஆதரிப்பதாக ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால், பாஜகவுடனோ, காங்கிரஸுடனோ கூட்டணி வைக்க தயாராக இருப்பதாக பிரத்யோத் மாணிக்ய தெரிவித்துள்ளார்.