கோவா தேர்தல்: குடும்பம் குடும்பமாக தேர்தலில் போட்டியிட சீட்டுகளை வாரி வழங்கிய பாஜக!
பனாஜி: கோவா சட்டசபை தேர்தலில் கணவன், மனைவி என குடும்பம் குடும்பமாக தேர்தலில் போட்டியிட சீட் கொடுத்துள்ளது பாஜக. ஆனால் முன்னாள் முதல்வரும் கோவா பாஜகவின் முகமாக இருந்தவருமான மறைந்த மனோகர் பாரிக்கர் குடும்பத்தில் யாருக்கும் சீட் கொடுக்கப்படாதது சர்ச்சையாகி உள்ளது.
கோவா சட்டசபை தேர்தல் பிப்ரவரி 14-ந் தேதி நடைபெறுகிறது. கோவா தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மார்ச் 10-ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
கோவா சட்டசபை தேர்தலுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக நேற்று வெளியிட்டது. மொத்தம் 34 வேட்பாளர்களை பாஜக அறிவித்தது. இதில் முன்னாள் முதல்வர் மனோகர் பாரிக்கர் மகன் உட்பால் பாரிக்கருக்கு சீட் கொடுக்கப்படவில்லை.
அதேநேரத்தில் குடும்பத்தில் 2 பேருக்கு என தேர்தலில் போட்டியிட பாஜக வாய்ப்பு கொடுத்துள்ளது சர்ச்சையாகி உள்ளது. விஸ்வஜித் ரானே, அவரது மனைவி திவ்யா, அடான்சியோ, அவரது மனைவி ஜெனிபர் ஆகியோருக்கு தேர்தலில் போட்டியிடுவதற்கு பாஜக மேலிடம் வாய்ப்பு கொடுத்துள்ளது. பனாஜி தொகுதியில் அடான்சியோ போட்டியிடுகிறார். 20 ஆண்டுகளுக்கு முன்னர் சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கியவர்தான் அடான்சியோ. காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி 2019-ல் 9 காங். எம்.எல்.ஏக்களுடன் பாஜகவில் இணைந்தவர் அடான்சியோ.
ப.சிதம்பரம் சார் ரொம்ப கதறாதீங்க... கோவா தேர்தல் விமர்சனத்துக்கு கெஜ்ரிவால் பதிலடி
கோவா பாஜக வேட்பாளர்கள் தேர்வு குறித்து தேர்தல் பொறுப்பாளரான மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில், மனோகர் பாரிக்கர் மகனுக்கு தேர்தலில் போட்டியிட தொகுதி ஒதுக்கினோம். நாங்கள் ஒதுக்கிய தொகுதியை அவர் ஏற்கவில்லை. அதனால் அது குறித்து ஆலோசித்து வருகிறோம். மனோகர் பாரிக்கர் குடும்பத்தினர் மீது பாஜகவுக்கு எப்போதும் மரியாதை உண்டு என்றார். இதனிடையே தேர்தலில் போட்டியிடுவது தொடர்பான முடிவை அடுத்த ஓரிருநாட்களில் அறிவிப்போம் என மனோகர் பாரிக்கர் மகன் உட்பால் பாரிக்கர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் லக்ஷ்மி காந்த் பர்சேகர், சிட்டிங் அமைச்சர் தீபக் பிரபு பஸ்கார் ஆகியோருக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. ஆனால் பாலியல் குற்றச்சாட்டால் அமைச்சரவையில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட மிலிந்த் நாயக், தேர்தலில் போட்டியிட பாஜக வாய்ப்பு கொடுத்திருக்கிறது. அதேபோல் பல புதுமுகங்களையும் இந்த தேர்தலில் பாஜக களத்தில் இறக்கி இருக்கிறது.