குஜராத் தேர்தல்.. மதில் மேல் பூனையாக எக்ஸிட் போல்கள்.. ஒருவேளை இப்படி நடந்தால் பாஜக நிலை?
Recommended Video
டெல்லி: குஜராத் மற்றும் ஹிமாச்சல பிரதேச மாநில சட்டசபை தேர்தல் தொடர்பாக, இன்று வெளியான அனைத்து டிவி சேனல்களின் எக்சிட் போல்களும் பாஜகவே இரு மாநிலங்களிலும் வெல்லும் என கூறியுள்ளன.
வரும் 18ம் தேதி, திங்கள்கிழமை தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், இப்போது வெளியாகியுள்ள இந்த எக்சிட் போல் முடிவுகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
ஏறத்தாழ இவை மக்களின் மன நிலையை பிரதிபலிப்பதாகவே இருக்கும் என அரசியல் கட்சியினர் எதிர்பார்க்கிறார்கள்.
பாஜக நினைத்த அளவு இல்லை
அதேநேரம், மொத்தம் 182 தொகுதிகளை கொண்ட குஜராத் சட்டசபை தேர்தலில், பாஜக நினைத்த அளவுக்கு, அல்லது அது திட்டமிட்ட அளவுக்கு வெற்றி பெற முடியாது என்பதும் இந்த எக்சிட் போல் உணர்த்தும் பாடம்.
பாஜக தலைவர்கள் நம்பிக்கை
பாஜக தலைவர்கள் தங்கள் தேர்தல் பிரசாரத்தில் குஜராத்தில் 150 தொகுதிகளுக்கும் மேல் பாஜக வெல்லும் என சவால்விடும் தொனியில் பிரசாரம் செய்திருந்தனர். ஆனால் இதுவரை வெளியான எந்த ஒரு மீடியாவின் எக்சிட் போலிலும் அந்த அளவுக்கு இடங்கள் பாஜகவுக்கு கிடைக்கும் என சொல்லப்படவில்லை.
அதிகபட்சமே இதுதான்
அதிகபட்சமாக சஹாரா டிவி கருத்துகணிப்பில்தான் பாஜக 120 தொகுதிகள் வரை வெல்லும் என கூறப்பட்டுள்ளது. அடுத்தபடியாக ரீபப்ளிக் மற்றும் நியூஸ் எக்ஸ் சேனல்கள் பாஜக 115 இடங்கள் வரை வெல்லும் என கூறியுள்ளன. இந்தியா டுடே 99 இடங்கள் முதல் 113 இடங்கள் வரையில்தான் பாஜக கைப்பற்ற வாய்ப்புள்ளதாக கூறுகிறது.
பரபரப்பு
இந்த கருத்து கணிப்புகளை வைத்து பார்க்கும்போது பாஜகவின் வெற்றி 'கேக் வாக்' போல இருக்காது என்றே தெரிகிறது. குறைந்தபட்சம் 92 தொகுதிகளையாவது கைப்பற்றினால்தான் அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்க முடியும். எக்ஸிட் போலில் தரப்பட்ட கணிப்பைவிடவும் குறைவான இடங்களை பாஜக கைப்பற்றுமானால் அது பெரும்பான்மையை எட்டுமளவுக்கு இருக்க வேண்டும் என்ற கவலையும் அக்கட்சியினருக்கு உள்ளது. டிசம்பர் 18ம் தேதிவரை பொறுத்திருந்தால்தான் இதற்கு விடை கிடைக்கும்.