பீகார் முதல்வர் வேட்பாளராக சுஷில் மோடியை முன்னிறுத்த பாஜகவில் கடும் எதிர்ப்பு!!
பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலில் முதல்வர் வேட்பாளராக சுஷில் குமார் மோடியை முன்னிறுத்த பாரதிய ஜனதாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
பீகார் சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலை சுஷில்குமார் மோடி தலைமையில் பாஜக சந்திக்கும் என்று மத்திய அமைச்சர் ராதாமோகன்சிங் சனிக்கிழமையன்று கூறியிருந்தார்.
ஆனால் மத்திய அமைச்சர் ராதாமோகன்சிங் கருத்துக்கு பாரதிய ஜனதா கட்சியிலேயே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பீகார் மாநில பாஜக மூத்த தலைவர் பிரேம்குமார், சுஷில்குமார் மோடி போன்ற தனிநபர்களை முன் வைத்து தேர்தலை எதிர்கொள்வது சரியாக இருக்காது. வலுவான கூட்டுத் தலைமையின் கீழ்தான் சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.
ஆனால் முன்னாள் மத்திய அமைச்சர் சிபி தாக்கூர், யார் முதல்வர் வேட்பாளர்? யார் தலைமையில் தேர்தலை சந்திப்பது என்பதை வீதிகளில் உட்கார்ந்து விவாதித்துக் கொண்டிருக்கக் கூடாது. பாஜக மேலிடம் என்ன முடிவை எடுக்கிறதோ அதை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்றார்.