டோல்கேட் ஊழியரை அறைந்த பாஜக எம்.எல்.ஏ... சிசிடிவி கேமராக் காட்சிகளால் பரபரப்பு
போபால்: மும்பை அருகே டோல்கேட் ஊழியரை பாஜக எம்.எல்.ஏ. கன்னத்தில் அறைந்ததாகவும், அது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளதாகவும் வெளியான தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மத்திய பிரதேச பாரதீய ஜனதா எம்.எல்.ஏ ருஷ்டம் சிங். இவர் தனது ஆதரவாளர்களுடன் ஆக்ரா- மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மோரீனா என்ற இடத்தில் காரில் சென்று கொண்டு இருந்த போது, டோல் கேட் ஊழியர்கள் கட்டணம் கட்டச் சொல்லி வற்புறுத்தியதாகத் தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த எம்.எல்.ஏ. டோல்கேட் ஊழியரை கன்னத்தில் அறைந்ததாகக் கூறப்படுகிறது. இது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
எனினும், இது தொடர்பாக பாஜக நிர்வாகிகளுக்கு எதிராக டோல்கேட் ஊழியர்கள் இதுவரை எந்த புகாரையும் கொடுக்கவில்லை. ஆனால், பாஜக தொண்டர்கள் அளித்த புகாரின் பேரில் டோல்கேட் ஊழியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோல், கடந்த ஜூன் 5ந்தேதி உத்தரபிரதேச மாநிலம் லக்னோ அருகே பைசாபாத் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டோல்கேட்டில் ரூ.100 கட்டணம் செலுத்த சொன்ன ஊழியரை சமாஜ்வாதி கட்சியின் சுரேஷ் யாதவ், கடுமையாக தாக்கினார்.
அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளின் அடிப்படையில் சுரேஷ் யாதவ் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.