ஹரியானாவில் ஆட்சியைக் கைப்பற்ற பாஜக மும்முரம்!!
சண்டிகர்: ஹரியானா மாநில சட்டசபை தேர்தலுக்கு ஆயத்தமாகிவிட்டது பாரதிய ஜனதா. அம்மாநிலத்தில் பேரணி நடத்திய பாஜக தலைவர் அமித்ஷா தமது கட்சியின் பிரசாரத்தை தொடங்கி வைத்திருக்கிறார்.
ஹரியானா மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் முதல்வர் ஹூடா தலைமையிலான அரசுக்கு உட்கட்சியிலேயே கடும் எதிர்ப்பு இருந்து வருகிறது. இந்த எதிர்ப்பு அலையால் பாரதிய ஜனதா ஆட்சியில் அமர வாய்ப்பிருக்கிறது என்பது கருத்து கணிப்புகள்.
இதற்கேற்ப பாரதிய ஜனதாவும் சில வியூகங்களை வகுத்து இம்மாநிலத்தில் ஆட்சியை எப்படியும் கைப்பற்றியே தீருவது என்ற கங்கணத்துடன் இருக்கிறது. அதன் வியூகங்கள் சில.
22 தொகுதிகள்..
ஹரியானாவில் ஆட்சி அமைக்கும் நோக்கத்துடன் மாநிலத்தின் தென்பகுதியில் 22 தொகுதிகளைக் கைப்பற்றுவது என்பதுதான் பாஜகவின் இலக்கு. இதற்காகத்தான் மோடி அமைச்சரவையில் இந்தர்ஜித்சிங் மற்றும் கிருஷ்ணன் பால் குஜ்ரார் ஆகியோர் அமைச்சர்களாக சேர்க்கப்பட்டனர்.
தலித் வாக்குகள்
அதேபோல் தலித்துகளின் வாக்கு வங்கியை குறிவைக்கிறது பாரதிய ஜனதா. காங்கிரஸ் முதல்வர் ஹூடா தலைமையிலான அரசில் தலித்துகளுக்கு பாதிப்பில்லை என்ற பிரசாரத்தை முன்னெடுத்திருக்கிறார் பாஜக கட்சித் தலைவர் அமித்ஷா. ஹரியானாவில் நேற்று நடைபெற்ற பிரசாரத்தின் போது தமது உரையில் 10 முறை தலித்துகளைப் பற்றி குறிப்பிட்டிருந்தார்.
முதல்வர் வேட்பாளர் இல்லை
மேலும் ஹரியானாவில் யார் ஒருவரையும் முதல்வர் வேட்பாலர் என்று அறிவிக்கப் போவதில்லை என்ற முடிவை பாரதிய ஜனதா எடுத்திருக்கிறது. இதன் மூலம் எந்த ஒரு அதிருப்திக்கும் இடம் கொடுக்கக் கூடாது என்பது அந்த கட்சியின் திட்டம்.
மேலிடமே முடிவு
ஹரியானாவில் யார் முதல்வர் என்ற பேச்சே கூடாது என்று பாஜக மேலிடம் உத்தரவிட்டுள்ளது. அது கட்சி மேலிடத்தின் இறுதி முடிவு.. அது பற்றி பேசவே கூடாது என்று திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோடி பிரசாரம்
ஹரியானா சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் நிறைய கூட்டங்களில் மோடி கலந்து கொள்ள திட்டமிட்டிருக்கிறார்.
ஊழலே பிரதானம்
ஹூடா அரசின் ஊழல்களைத்தான் பாரதிய ஜனதா தமது பிரசார ஆயுதமாக பயன்படுத்த முடிவு செய்துள்ளது.
கட்சி கட்டமைப்பு
பாரதிய ஜனதாவைப் பொறுத்தவரை கட்சி கட்டமைப்பைத்தான் பிரதான ஒன்றாக நம்புகிறது. அங்குள்ள கட்சித் தலைவர்களை விட கட்டமைப்பு வலுவானதாக இருப்பதாக நம்புகிறது.
இந்த வியூகங்களே ஹரியானாவில் ஆட்சி அமைக்க போதும் என்று நம்புகிறது பாஜக!