நம்ம மாநிலம் ஜெயிக்கணும்.. கவுரவ பிரச்சினையாக பார்க்கும் மோடி, அமித்ஷா.. சொல்லி அடிக்கிறதா பாஜக
காந்திநகர்: குஜராத் மாநிலம் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சொந்த மாநிலம் என்பதால், குஜராத் தேர்தல் பாஜகவுக்கு ஒரு கவுரவ பிரச்சினையாகவே உள்ளது. வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க குஜராத் சட்டமன்ற தேர்தல் வெற்றியும் முக்கியம் என பாஜக தலைவர்கள் பார்க்கின்றனர்.
182 தொகுதிகளை கொண்ட குஜராத் சட்டமன்றத்திற்கு கடந்த 1 மற்றும் 5 ஆம் தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.
கடந்த 5 ஆம் தேதி வெளியிடப்பட்ட தேர்தல் கருத்துக்கணிப்பில் பாஜக இந்த முறையும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்து விடும் என்றே சொல்லப்பட்டன. அதுவும் காங்கிரஸ் கட்சிக்கு கடந்த முறையை விட சறுக்கல் அதிகமாக இருக்கும் என்று கருத்துக்கணிப்புகள் சொல்லியது.

குஜராத் தேர்தல்
கடந்த 2017 சட்டமன்ற தேர்தலில் பாஜகவுக்கு படேல் சமூகத்தினர் மத்தியில் ஒரு எதிர்ப்பு அலை நிலவியது. இது அக்கட்சிக்கு அப்போதைய தேர்தலில் கடும் தலைவலியாக இருந்தது. ஆனால், தற்போது நடைபெற்ற தேர்தலில் பாஜகவுக்கு கடந்த முறை அளவுக்கு நெருக்கடி இல்லை என்றே சொல்லலாம். காங்கிரஸ் கட்சியில் தலைவர் பதவியில் மாற்றம் ராகுல் காந்தியின் ஜோடோ யாத்திரை கூட பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதாக தெரியவில்லை. ஆம் ஆத்மி தீவிர பிரசாரம் மேற்கொண்டது. அக்கட்சியும் குஜராத்தில் தனது தடத்தை பதிவு செய்யும் என்றே தெரிகிறது.

ஹாட்ரிக் வெற்றியை பெற
குஜராத்தை பொறுத்தவரை பிரதமர் மோடியின் சொந்த மாநிலம். உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் குஜராத்தை சேர்ந்தவர்தான் என்பதால் பாஜகவுக்கு இது ஒரு கவுரவ பிரச்சினையாக உள்ளது. ஏனென்றால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் வென்று மீண்டும் ஆட்சியை பிடித்து ஹாட்ரிக் வெற்றியை பெற வேண்டும் என்பதில் கவனமாக இருக்கும் பாஜகவுக்கு குஜராத்தில் வெற்றி பெறுவது மிகவும் முக்கியம் என்று அக்கட்சி நினைக்கிறது.

கடந்த முறையை விட
இதனால், 27 ஆண்டுகளாக தங்கள் வசம் இருக்கும் குஜரத்தில் ஆட்சியை இழந்து விடக்கூடாது என்பதில் பாஜக கடும் முனைப்பு காட்டியது. பிரதமர் மோடி, அமித்ஷா, ஜேபி நட்டா என பாஜகவின் முக்கிய தலைவர்கள் பலரும் குஜராத்தில் பல நாட்கள் முகாமிட்டு அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டனர். பாஜகவின் இந்த உழைப்புக்கு கை மேல் பலன் கிடைத்தது என்று சொல்லும் நிலைதான் தற்போதைய முன்னணி நிலவரங்கள் சொல்லும் கருத்தாக உள்ளது. கடந்த முறையை விட அதிக இடங்களில் பாஜக வெற்றி பெறும் என்பதே தற்போதைய முன்னணி நிலவரமாக இருக்கிறது.

காங்கிரசின் பிரச்சாரம்
மறுபக்கம் காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை இரு மாநில தேர்தல்களில் பெரிய அளவு ஆர்வம் காட்டவில்லை என்பது தேர்தல் களத்தில் அப்பட்டமாக தெரிந்தது. பாரத் ஜோடோ யாத்திரை நடத்தி வரும் ராகுல் காந்தி இமாச்சல பிரதேசம் பக்கம் தலைகாட்டவே இல்லை. குஜராத்தில் ஒப்புக்கு பிரசாரத்தில் ஈடுபட்டு விட்டு சென்று விட்டார். காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அசோக் கெலாட் உள்ளிட்டோர் பிரசாரம் மேற்கொண்டாலும் காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் பெரும் தாக்கத்தை இது ஏற்படுத்தியதாக தெரியவில்லை.

காங்கிரஸ் ஆர்வம் காட்டவில்லை?
மாநிலங்களை பொறுத்தவரை பாஜக எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சி அமைத்து விடுவதாக எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் பெரும் குற்றச்சாட்டாக இருக்கிறது. இதனால், ஜெயித்தாலும் எம்எல்ஏக்களை வாங்கிவிடுவார்கள் என்பதால் காங்கிரஸ் தலைமை மாநில தேர்தல்களை சீரியசாக எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாகவே காங்கிரஸ் மேலிடம் இந்த இரு மாநில தேர்தலிலும் பெரிதும் ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது. வரும் நாடாளுமன்ற தேர்தலை மனதில் கொண்டே ராகுல் காந்தியின் மூவ் இருக்கும் என்று காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.












Click it and Unblock the Notifications