ஜார்கண்டில் திடீர், திடீரென மாறிய டிரெண்டால் டென்ஷனான பாஜக தலைவர்கள்
ராஞ்சி: ஜார்கண்ட் சட்டசபை தேர்தல் முடிவுகளில் ஏற்ற இறக்கம் காணப்பட்டதால் ஒரு கட்டத்தில் பாஜக தலைவர்களால் தங்கள் கட்சி ஆட்சியமைக்குமோ இல்லையோ என்ற பதற்றமான சூழ்நிலை உருவாகியது.
வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கியதில் இருந்தே பாஜக முன்னிலை பெற்று வந்தது. இதனால் பாஜக அறுதி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுவிடும் என்ற சூழல் நிலவியதால் தொண்டர்கள் பட்டாசுகளை வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் காலை 11.30 மணிக்கெல்லாம் டிரெண்ட் மாறியது.
ஆளும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவுக்கு ஆதரவாக பல தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பு திரும்பியது. தனிப்பெறும்பான்மையோடு ஆட்சியமைக்க 41 தொகுதிகளை கைப்பற்ற வேண்டியுள்ள சூழ்நிலையில், மதியம் 1.25 மணிக்கு தேர்தல் ஆணையம் வெளியிட்ட தகவல்படி, பாஜக 35 தொகுதிகளில் முன்னிலையிலும், ஜேஎம்எம் 19 தொகுதிகளிலும் முன்னிலை வகிப்பதாக கூறப்பட்டது. மேலும் ஜேஎம்எம் ஒரு தொகுதியில் வெற்றி பெற்றது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
எனவே பாஜகவுக்கு அவ்வளவு எளிதில் வெற்றி வாய்ப்பு கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்தது. இழுபறி நீடிப்பதால் பாஜக தொண்டர்கள் நகத்தை கடித்தபடி இருந்தனர். இந்நிலையில் மாலையில் ஓரளவுக்கு நிலைமை திரும்பியது. மாலை 6.15 மணியளவில் 33 இடங்களில் பாஜக வெற்றி பெற்றதாகவும், 4 இடங்களில் அக்கட்சி முன்னிலையில் இருப்பதாகவும் தகவல் வெளியானது.
அதேபோல 8 தொகுதிகளை கைப்பற்றிய ஜார்கண்ட் விகாஸ் மோர்ச்சா, பாஜகவுடன் இணைய முடிவு செய்த தகவலும் வெளியானது. பிறகுதான் பாஜக தலைவர்கள் முகத்தில் மலர்ச்சியை பார்க்க முடிந்தது.