மகாராஷ்டிரா பாஜக அரசில் சேரும் சிவசேனா: சேனாவுக்கு 12 அமைச்சர் பதவிகள்
மும்பை: கிட்டத்தட்ட 70 நாட்களாக நீடித்து வந்த இழுபறி தற்போது முடிவுக்கு வந்துள்ளது. மகாராஷ்டிர அமைச்சரவையில் சிவசேனாவும் இடம்பெறுகிறது என்று அம்மாநில முதல்வர் பட்னாவிஸ் அறிவித்துள்ளார்.
சமீபத்தில் நடந்த மகாராஷ்டிரா சட்டசபைத் தேர்தலில் பாஜக 122 இடங்களில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தேசியவாத காங்கிரஸ் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு அளித்தது. அதனைத் தொடர்ந்து கடந்த அக்டோபர் மாதம் 31ம் தேதி பட்னாவிஸ் தலைமையில் அங்கு ஆட்சி அமைக்கப் பட்டது. முதலமைச்சர் பட்னாவிஸ் உட்பட 8 பேர் அமைச்சர்களாகவும், 2 பேர் இணை அமைச்சர்களாகவும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
ஆனபோதும், தொடர்ந்து சிவசேனாவுடன் பாஜக பேச்சு வார்த்தை நடத்தி வந்தது. தற்போது அந்த பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து சிவசேனா தலைவர்களுடன் இணைந்து இன்று செய்தியாளர்கள் மத்தியில் பேசினார் அம்மாநில முதல்வர் பட்னாவிஸ். அப்போது அவர், ‘சிவசேனாவைச் சேர்ந்த 12 பேர் அமைச்சர்களாக நாளை பதவியேற்க உள்ளதாகவும், அவர்களில் 5 பேர் கேபினட் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
மகாராஷ்ட்ரா சட்டசபையில் நாளை மாலை 4 மணியளவில் நடைபெற உள்ள அமைச்சரவை விரிவாக்கத்தின் போது, புதிய அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.