தோல்வி பயத்தில் இருக்கும் பாஜக பேடியை பலிகடா ஆக்கிவிட்டது: கெஜ்ரிவால்
டெல்லி: மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பலை காப்பாற்ற பாஜக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கிரண் பேடியை டெல்லி சட்டசபை தேர்தலில் முதல்வர் வேட்பாளர் ஆக்கியுள்ளது என்று ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை எதிர்த்து பாஜக சார்பில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கிரண் பேடி போட்டியிடுகிறார். பாஜகவின் முதல்வர் வேட்பாளராக அவர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இது குறித்து கெஜ்ரிவால் டெல்லியில் நடந்த பேரணி ஒன்றில் கூறுகையில்,
கிரண் பேடி
பாஜக தினமும் பல வித்தைகள் செய்கின்ற போதிலும் டெல்லி சட்டசபை தேர்தலில் படுதோல்வி அடையப் போகிறது. தேர்தலில் தோல்வி அடைந்துவிடுவோம் என்பது பாஜகவுக்கு தெரியும். அதனால் கடைசி நேரத்தில் கிரண் பேடியை கொண்டு வந்து அவரை பலிகடா ஆக்கியுள்ளது.
பாஜக
பாஜகவை யாராலும் காப்பாற்ற முடியாது. அது மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பல். இருப்பினும் அது தினமும் ஒரு வித்தை செய்கிறது.
அதிர்ச்சி
பாஜக எம்.பி.க்கள் கலந்து கொண்ட பேரணிகளுக்கு மிகக் குறைந்த அளவே மக்கள் வந்ததால் அக்கட்சி அதிர்ச்சி அடைந்துள்ளது.
மோடி
பாஜக தலைவர்கள், 200 எம்.பி.க்கள் ஏன் மோடியின் கூட்டத்திற்கு கூட மக்கள் அவ்வளவாக வரவில்லை.
பெண்கள்
தேர்தலுக்கு முன்பு பாஜக பெண்களின் பாதுகாப்பு பற்றி பேசியது. தற்போது பெண்களின் பின்னால் சென்று அவர்களை நான்கு குழந்தைகளை பெற்றுக் கொள்ளுமாறு கூறுகிறது. நம் பெண்கள் என்ன குழந்தைகள் பெறும் எந்திரமா என்று அவர்களை கேட்கிறேன் என்றார்.