வி.கே.சிங்கைத் தொடர்ந்து பாஜகவில் இணைகிறாரா கிரண்பேடி: கெஜ்ரிவாலுக்கு எதிராக போட்டி?
டெல்லி: முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியான கிரண்பேடி பாரதீய ஜனதா கட்சியில் இணையலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஊழலுக்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் சமூக சேவகர் அன்னா ஹசாரே. இவரைத் தனது குரு என அழைத்து வந்த அரவிந்த் கெஜ்ரிவால், ஹசாரேவின் வார்த்தையையும் மீறி அரசியல் கட்சி ஆரம்பித்தார். அதன் தொடர்ச்சியாக சமீபத்தில் நடைபெற்ற டெல்லி சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆதரவோடு ஆட்சி அமைத்தார். ஆனால், ஜனலோக்பால் மசோதா நிறைவேறாத நிலையில் தனது முதல்வர் பதவியை அவர் ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் அன்னா ஹசாரேவுடன் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்ட முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியான கிரண்பேடி, சமீப காலமாக பாஜக பிரதமர் வேட்பாளர் மோடிக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக கிரண்பேடி தற்போது பாரதீய ஜனதா கட்சியில் இணையலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக பாஜக முக்கிய நிர்வாகிகள் கிரண்பேடியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். மேலும், கட்சியில் சேரும் கிரண் பேடி லோக்சபா தேர்தலில் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக களம் இறக்கப் படுவார் எனத் தெரிகிறது.
இதற்கு முன்னர் அன்னா ஹசாரேவுடன் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் ராணுவ தளபதி வி.கே. சிங் நேற்று பாரதீய ஜனதா கட்சியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.