ரூபாய் நோட்டு எபெக்ட் இல்லை... குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.க அமோக வெற்றி!
குஜராத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. இதனை அக்கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர்.
காந்தி நகர் : குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பெரும்பாலான இடங்கள் பா.ஜ.க வெற்றி பெற்றுள்ளது. இதனால் உற்சாகம் அடைந்துள்ள அக்கட்சியினர் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
பிரதமர் மோடி கடந்த 8 ஆம் தேதி முதல் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். மோடியின் இந்த அறிவிப்புக்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு எழுந்தது. மக்கள் செலவுக்கு பணமின்றி அல்லாடுவதாக எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.

இந்நிலையில் குஜராத் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில் ஆளும் பாஜக பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக வாபி மாவட்டத்தில் 44 நகராட்சிகளில் 41 நகராட்சிகளை பாஜக கைப்பற்றியுள்ளது. இதேபோல் கனக்பூர் -கன்சாத் பகுதியில் 22 இடங்களில் 21 இடங்களை பாஜக தக்க வைத்துள்ளது.
கொண்டல் தாலுக்காவில் 22 இடங்களில் 18 இடங்களை பாஜக கைப்பற்றியுள்ளது. 7 மாவட்ட பஞ்சாயத்துகளில் 5 மாவட்டங்களில் காவி அலை அடித்துள்ளது. எஞ்சிய 15 மாவட்ட தாலுக்காக்களில் 5 மாவட்டங்களை பாஜகவும் 4 மாவட்ட தாலுக்காக்களை காங்கிரசும் பங்கிட்டுள்ளன. மற்ற தொகுதிகளில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தேர்தல் நிறுத்தப்பட்டுள்ளது.
குஜராத்தில் ஆளும் பாஜக வெற்றி பெற்றுள்ளதையடுத்து வெற்றிக்காக உழைத்த கட்சியினர் மற்றும் குஜராத் மாநில முதலமைச்சருக்கு பிரதமர் டுவீட்டரில் வாழ்த்து கூறியுள்ளார்.
இதேபோல் மகாராஷ்டிராவில் நடைபெற்ற ஆளும் சிவசேனா - பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. கறுப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கைக்காக பிரதமர் மோடி 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்துள்ள நிலையில் பா.ஜ.கவின் வாக்கு வங்கி உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications