ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் பாஜக நிலை என்ன ஆகியிருக்கும் தெரியுமா? விளாசிய மமதா பானர்ஜி
Recommended Video
கொல்கத்தா: பாஜகவால் வரும் லோக்சபா தேர்தலில் அதிகபட்சம் 150 தொகுதிகளுக்கு மேல் வெல்ல முடியாது என்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
லோக்சபாவில் கொண்டுவரப்பட்ட, நம்பிக்கையில்லா தீர்மானத்தை பாஜக அரசு தோற்கடித்த நிலையில், கொல்கத்தாவில், நடைபெற்ற நிகழ்ச்சியில் மமதா பானர்ஜி, பாஜக மீது சரமாரி விமர்சனங்களை முன் வைத்தார்.
மமதா பானர்ஜி தனது உரையில், கூறியதாவது: கொல்கத்தாவில் அடுத்த ஆண்டு ஜனவரி 19ம் தேதி அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களும் பங்கேற்கும் மாபெரும் பொதுக்கூட்டத்திற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
தாலிபான் இந்துத்துவா
பாஜக பரப்பிவரும் வெறுப்பு அரசியலால்தான் கடந்த பல மாதங்களாக நாட்டில் கும்பல் படுகொலைகள் நடந்து வருகின்றன. பாஜக தலைமை தாலிபான் இந்துத்துவாவை பரப்பி வருகிறது. பிரதமர் மோடியின் கைகளில் ரத்தத்தின் கறை உள்ளது. அவர் தன்னை ஹிட்லர், முசோலினியைவிட மிகப்பெரிய சர்வாதிகாரி என நினைத்துக்கொள்கிறார்.
ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால்
நாடாளுமன்றத்திற்கு உள்ளே வேண்டுமானால், பாஜக நம்பிக்கையில்லா தீர்மானத்தை தோற்கடித்திருக்கலாம். ஆனால், நாட்டில் பாஜகவுக்கு ஆதரவு இல்லை. நம்பிக்கையில்லா தீர்மானத்தில் 325 வாக்குகளை பாஜக பெற்றுள்ளது. ஜெயலலிதா மட்டும் உயிரோடு இருந்திருந்தால், பாஜகவுக்கு இவ்வளவு வாக்குகள் கிடைத்திருக்காது. பாஜக தங்களது மிக பழமையான கூட்டாளியான சிவசேனாவை இழந்துள்ளது. கூட்டணிகள் ஒவ்வொன்றாக குறைந்தபடி உள்ளன.
ஸ்டாலின் தோற்கடிப்பார்
2019 லோக்சபா தேர்தலில், தமிழகத்தில் அதிமுகவை மு.க.ஸ்டாலின் தோற்கடிப்பார். உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் தலைவர்கள் மனது வைத்தால், அக்கூட்டணி 50 முதல் 80 தொகுதிகளை எளிதில் வெல்லும். மத்திய பிரதேசத்தில் கடந்த லோக்சபா தேர்தலில் 28 தொகுதிகளை, பாஜக வென்றது. அடுத்த தேர்தலில் அது 8 தொகுதிகளை மட்டுமே வெல்லக் கூடும். ராஜஸ்தானில் 25 தொகுதிகளை வென்றிருந்தது. இம்முறை 5 தொகுதிகளைத்தான் வெல்ல முடியும். குஜராத்தில் ஒரு சீட்டும் வெல்ல முடியாது. பீகாரில் லாலு பிரசாத் யாதவ் கட்சி அனைத்து தொகுதிகளையும் வாரி சுருட்டும். மேற்கு வங்கத்தில், பாஜகவுக்கு புற வாசலை மக்கள் காட்டிவிடுவார்கள். ஒடிசாவில் நவின் பட்நாயக் கட்சிதான் வெல்லும். பஞ்சாப்பில் அமரிந்தர் சிங் பாஜகவை விரட்டியடிப்பார். வேறு எங்குதான் அக்கட்சி வெல்ல முடியும்?
150 தொகுதிகளை தாண்டாது
தேசிய ஜனநாயக கூட்டணி கடந்த தேர்தலில் 325 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனால், 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலில், பாஜக 100 தொகுதிகளை தாண்ட முடியுமா என்பதே சந்தேகம். அதிகபட்சமாக போனால் 150 தொகுதிகளை வெல்ல கூடும். பாஜகவால் தனிப்பெரும்பான்மை பெறவே முடியாது. எனது வார்த்தைகளை குறித்து வைத்துக்கொள்ளுங்கள். இவ்வாறு மமதா பானர்ஜி தெரிவித்தார். இதனிடையே, ஜெயலலிதா இருந்திருந்தால் மத்திய அரசிற்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை அதிமுக ஆதரித்திருக்கும் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் தெரிவித்துள்ளார். நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் மத்திய அரசுக்கு ஆதரவாக, அதிமுக வாக்களித்தது குறிப்பிடத்தக்கது.