கருப்புப் பணம் பதுக்கிய 627 பேரின் பட்டியலைசுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது மத்திய அரசு!
டெல்லி: வெளிநாட்டு வங்கிகளில் கருப்புப் பணத்தைப் பதுக்கிய 627 பேரின் பட்டியலை உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு இன்று தாக்கல் செய்தது.
வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கருப்பு பணத்தை மீட்பது குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. உச்ச நீதிமன்ற உத்தரவின்பேரில் நீதிபதிகள் எம்.பி.ஷா, அரிஜித் பசாயத் தலைமையில் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழுவும் விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில் வெளிநாடுகளில் கருப்புப் பணத்தை பதுக்கி வைத்துள்ளோரின் பட்டியலை மத்திய அரசு பெற்றுள்ளது.
இதில் டாபர் இந்தியா நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் பிரதீப் பர்மன், ராஜ்கோட்டைச் சேர்ந்த ஜி டிரேடிங் கம்பெனி தலைமை மேம்பாட்டாளர் பங்கஜ் சிமன்லால் லோதியா, கோவாவைச் சேர்ந்த சுரங்க தொழிலதிபர் ராதா சதீஷ் திம்ப்லோ பெயரை மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் தாக்கல் செய்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து, ரஞ்சனா பி.தேசாய், மதன் லோகுர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வெளிநாடுகளில் பணம் பதுக்கியுள்ள இந்தியர்களின் முழு பட்டியலையும் தாக்கல் செய்யாத மத்திய அரசுக்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
அனைத்து பெயர்களையும் வெளி யிட வேண்டும் என்று ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மாற்றக் கோரி மனு தாக்கல் செய்துள்ளதற்கும் கண்டனம் தெரிவித்தனர்.
கருப்பு பணம் பதுக்கியுள்ளவர்களை பாதுகாக்க மத்திய அரசு குடை பிடிக்க வேண்டாம் என்று தெரிவித்த நீதிபதிகள், ‘நீங்கள் வேறு எதுவும் செய்ய வேண்டாம். முழு பட்டியலையும் தாக்கல் செய்யுங்கள். சிறப்பு புலனாய்வுக் குழு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க நாங்கள் உத்தரவிடுகிறோம்' என்று தெரிவித்தனர்.
மேலும், ‘இப்பிரச்சினையை மத்திய அரசின் பொறுப்பில் விடமுடியாது. அப்படி செய்தால், கருப்பு பணத்தை மீட்கும் கனவு நம் காலத்தில் நடக்காது. ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவில் ஒரு வார்த்தையைக்கூட மாற்றமாட்டோம். கருப்பு பணம் பதுக்கியுள்ளவர்களின் முழு பட்டியலையும் நீதிமன்றத்தில் மத்திய அரசு இன்று தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் இன்று காலை 10.30 மணிக்கு இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அட்டர்னி ஜெனரல் முகுல் ரோகத்கி 3 சீலிட்ட உறைகளைத் தாக்கல் செய்தார்.
வெளிநாடுகளுடன் மத்திய அரசு மேற்கொண்ட ஒப்பந்த நகல், கருப்புப் பணத்தைப் பதுக்கிய 627 பேர் கொண்ட பட்டியல் மற்றும் கருப்புப் பணம் குறித்து மத்திய அரசு மேற்கொண்டும் விசாரணை நிலவரம் ஆகியவை சீலிட்ட இந்த 3 உறைகளில் இருப்பதாக கூறி முகுல் ரத்தோகி இவற்றைத் தாக்கல் செய்தார்.
கவர்களை திறக்க நீதிபதிகள் மறுப்பு
இதனைத் தொடர்ந்து, சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் உள்ள ஹெச்.எஸ்.பி.சி வங்கி கிளையில் கணக்கு வைத்திருப்போரின் முழு விவரமும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த 627 பேரின் பட்டியலை வெளியிட வேண்டாம். அப்படி வெளியிட்டால் மத்திய அரசின் விசாரணை பாதிக்கும் என்று ரத்தோகி கூறினார்.
இதற்கு பதிலளித்த நீதிபதிகள், இந்த சீலிட்ட கவர்களை நாங்கள் திறக்கப் போவதில்லை. உச்சநீதிமன்ற பதிவாளர் மூலமாக இன்றே சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் ஒப்படைக்கப்படும். அக்குழுவின் தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆகியோர் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுப்பர் என்று கூறினர்.
விசாரணைக்கு கெடு
மேலும் சிறப்புப் புலனாய்வுக் குழு தனது விசாரணை அறிக்கையை அடுத்த மாதம் 30-ந் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். மத்திய அரசு தனது பூர்வாங்க விசாரணையை மார்ச் மாதத்துக்குள் முடிக்க வேண்டும். முழு விசாரணையை அக்டோபர் 31-ந் தேதிக்குள் முடித்துவிட வேண்டும் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கெடு விதித்துள்ளனர்.