மோடி மியான்மர், ஆஸ்திரேலியா, பிஜியில் இன்று முதல் 10 நாட்கள் சுற்றுப்பயணம்
டெல்லி: பிரதமர் மோடி மியான்மர், ஆஸ்திரேலியா மற்றும் பிஜி ஆகிய நாடுகளில் இன்று முதல் 10 நாட்கள் சுற்றுப்பயணம் செய்கிறார்.
நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்ற பிறகு இன்று 6வது முறையாக வெளிநாடு செல்கிறார். இன்று மியான்மர் கிளம்பும் மோடி அங்கு 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடக்கும் ஆசியான் உச்சிமாநாடு, கிழக்கு ஆசிய மாநாடு ஆகியவற்றில் கலந்து கொள்கிறார். அதன் பிறகு ஆஸ்திரேலியா செல்லும் அவர் நவம்பர் 15, 16 ஆகிய தேதிகளில் பிரிஸ்பேன் நகரில் நடக்கும் ஜி-20 நாடுகளின் உச்சிமாநாட்டில் கலந்து கொள்கிறார்.
ஆஸ்திரேலியாவில் இருந்து பிஜி தீவுகளுக்கு செல்லும் மோடி அங்கு இருநாட்டு உறவுகள் பற்றி பேச்சுவார்த்தை நடத்துகிறார். ஜி20 உச்சிமாநாட்டில் கருப்பு பணப் பிரச்சனை பற்றி பேசப் போவதாக மோடி தெரிவித்துள்ளார்.
இந்த சுற்றுப்பயணத்தில் மோடி ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட தலைவர்களை சந்தித்து பேசுகிறார். ராஜீவ் காந்தி பிரதமராக இருக்கையில் ஆஸ்திரேலியா சென்றார். அதையடுத்து 28 ஆண்டுகள் கழித்து தற்போது தான் இந்திய பிரதமர் ஒருவர் ஆஸ்திரேலியா சென்று பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
1981ம் ஆண்டு இந்திரா காந்தி பிஜி தீவுகளுக்கு சென்றார். அதன் பிறகு 33 ஆண்டுகள் கழித்து பிஜி தீவுகளுக்கு செல்லும் இந்திய பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.