ஆளுக்கு "ஒரு இலை" கூட கிடைக்க வாய்ப்பில்லையாமே!?
டெல்லி: அதிமுகவின் எந்தப் பிரிவுக்கும் இரட்டை இலை கிடைக்காது என்ற தகவல் பரவியிருப்பதால் அதிமுகவின் இரு அணிகளும் அதிர்ச்சியில் உள்ளன.
அ.தி.மு.கவில் பிளவுபட்டுக் கிடக்கும் மூன்று அணிகளும் இணைய வேண்டும் என மன்னார்குடி குடும்ப உறவுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
'இரட்டை இலையை மீட்பது அவ்வளவு எளிதானதல்ல. பன்னீர்செல்வத்தை கட்சிப் பதவிக்குக் கொண்டு வர தினகரன் விரும்பவில்லை. தற்போதுள்ள நிலையில், இரட்டை இலை சின்னம் யாருக்கும் கிடைக்க வாய்ப்பில்லை' என்கின்றனர் பா.ஜ.க வட்டாரத்தில்.
பிரமாணப் பத்திரங்கள்
இரட்டை இலைக்கு உரிமை கோரி, அ.தி.மு.க.வின் இரண்டு அணிகளும் தேர்தல் ஆணையத்தில் பிரமாண பத்திரங்களைத் தாக்கல் செய்துள்ளனர். பன்னீர்செல்வம் அணியின் சார்பில் மூன்று லட்சம் பிரமாண பத்திரங்களும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்தும் 3 லட்சம் பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இடையில் புகுந்த தீபா
இந்த விவகாரத்தில், யாரும் எதிர்பாராத வகையில், 52 ஆயிரம் மனுக்களைத் தாக்கல் செய்தார் தீபா. இதுகுறித்து நம்மிடம் பேசிய பா.ஜ.க நிர்வாகி ஒருவர், "அ.தி.மு.க என்ற கட்சிக்கு உரிமை கொண்டாடும் முயற்சியில் மூன்று அணிகளும் இறங்கியுள்ளன. நிர்வாகிகளின் ஆதரவு கடிதங்களைப் பெறாமல், வருவோர் போவோரிடம் எல்லாம் கையெழுத்து வாங்கி பிரமாண பத்திரமாகத் தாக்கல் செய்துள்ளனர்.
பயத்தில் இருக்கும் தீபா
ஒருவேளை அணிகள் இணைந்துவிட்டால், நம்மை யாரும் கழட்டிவிட்டுவிடக் கூடாது என்பதற்காகத்தான் தீபாவும் உரிமை கோருகிறார். இந்த பத்திரங்களைச் சரிபார்க்க நீண்டகாலம் ஆகும். 'சசிகலாதான் பொதுச் செயலாளர்' என தேர்தல் ஆணையம் அங்கீகாரம் கொடுக்கும் என தினகரன் தரப்பினர் எதிர்பார்க்கின்றனர். அப்படி ஒன்று நடப்பதற்கான அறிகுறிகள் தென்படவில்லை.
செல்லாது என்று அறிவித்தால்
கட்சியின் மீது அதிகாரம் செலுத்த பொதுச் செயலாளருக்குத்தான் அனைத்து தகுதிகளும் உள்ளன. ' சசிகலா பதவி செல்லாது' என ஆணையம் அறிவித்துவிட்டால், ஆளுக்கொரு திசையில் சிதறி ஓடுவார்கள். கட்சிப் பதவிக்கு பன்னீர்செல்வத்தை முன்னிறுத்த கே.பி.முனுசாமி உள்ளிட்ட சிலர் முடிவு செய்துள்ளனர். இந்த முடிவை பழனிசாமி ஏற்றாலும், நடராசன் தரப்பினர் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். போட்டியின்றி பன்னீர்செல்வம் தேர்வு செய்யப்படுவதை அவர்கள் விரும்ப மாட்டார்கள். சண்டை நீடித்துக் கொண்டேதான் இருக்கும். யார் கைகளுக்கும் கட்சியும் சின்னமும் கிடைக்க வாய்ப்பில்லை" என்றவர்,
ஜூலை 20க்குப் பிறகு
குடியரசுத் தலைவர் தேர்தல் வரையில் மௌனமாக இருக்கவே பா.ஜ.க தலைமை விரும்புகிறது. ஜூலை 20 அன்று தேர்தல் முடிவு வெளியாகும். அதன்பிறகு, அ.தி.மு.க மீது கூடுதல் கவனம் செலுத்தத் திட்டமிட்டுள்ளது பா.ஜ.க தலைமை. தேசிய அளவில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் இருந்தாலும், எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் தேர்தலை நடத்தி முடிக்க பா.ஜ.க தலைமை விரும்புகிறது.
கொங்கு சமூகத்திற்கு மட்டுமே முக்கியத்துவம்
தம்பிதுரையை சந்தித்து, ஆதரவு கொடுங்கள் எனக் கேட்டிருக்கிறார் வெங்கய்யா நாயுடு. கொங்கு சமூகத்தை மட்டுமே, டெல்லி தலைமை முன்னிறுத்துவதால் தினகரன் தரப்பினர் அதிர்ச்சியோடு கவனித்து வருகின்றனர். 'தினகரனை முன்னிறுத்தாவிட்டால், குடியரசுத் தலைவர் தேர்தலைப் புறக்கணிப்போம்' என அதிருப்தி எம்.எல்.ஏக்கள் சிலர் பேசுவதை பா.ஜ.க மேலிடம் கவனித்துக் கொண்டு வருகிறது.
பாஜகவுக்கு தூது அனுப்பிய திவாகரன்
இதுகுறித்து பா.ஜ.க நிர்வாகிகளுக்குத் தூது அனுப்பிய திவாகரன், 'தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். அவர்கள் முழுவதுமாக நம்மை ஆதரிப்பார்கள்' என விளக்கிக் கூறியிருக்கிறார். எனவே, தமிழ்நாட்டில் நடக்கும் விளையாட்டை டெல்லி மேலிடம் சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை" என்றார் விரிவாக.