யோசிக்கவே இல்லை.. நெருங்கி வந்து மகன், கணவனை கவ்விய முதலைகள்.. பாய்ந்து போய் காப்பாற்றிய பெண்கள்
லக்னோ: உத்தரபிரதேசம், பீகார் என இருவேறு மாநிலங்களில், முதலைகளுடன் சண்டையிட்டு தங்கள் குழந்தை மற்றும் கணவரை பெண்கள் காப்பாற்றிய சம்பவம் திகிலை கிளப்பியிருக்கிறது.. தன்னுடைய உயிரையும் பொருட்படுத்தாது, மகன், கணவரை இழுத்து சென்ற முதலைகளுடன் சண்டையிட்டு இந்த பெண்கள் காப்பாற்றியிருக்கிறார்கள்..நெஞ்சை உலுக்கும் இந்த சம்பவம் எப்படி நடந்தது? என்ன நடந்தது?
உத்தரபிரதேச மாநிலம் பக்ரை மாவட்டம் கைரிகாட் பகுதியில் உள்ளது தாகியா என்ற கிராமம்.. இங்குள்ள காக்ரா ஆற்றின் கால்வாயில் 5 வயது சிறுவன் குளித்து கொண்டிருந்தான். சிறுவனுக்கு அருகில் அவனது அம்மா மாயா நின்றுகொண்டிருந்தார்.. அப்போது திடீரென சிறுவனின் அலறல் சத்தம் கேட்டது.

மறுவிநாடியே பாய்ந்து
இதனால் பதறிப்போன மாயா, உடனே அருகில் சென்று பார்த்தார்.. அப்போது ஒரு ராட்சத முதலை, சிறுவனை தண்ணீருக்குள் இழுத்து செல்ல நெருங்கி வந்தது.. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த தாய் மாயா, ஒருநொடிகூட யோசிக்காமல் மறுவிநாடியே ஆற்றில் குதித்து மகனை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டார்.
மகனை இறுக்கமாக பிடித்து கொண்ட மாயா, தன்னிடமிருந்த சிறு கம்பியால் முதலையை குத்தினார்.. முதலையின் தாடையை குறிவைத்தே, அந்த சின்னஞ்சிறு கம்பியால் ஓங்கி ஓங்கி குத்தினார்.. இந்த பயங்கர தாக்குதலை முதலையால் எதிர்கொள்ள முடியவில்லை.. இதனால், முதலை தன்னுடைய பிடியை மெல்ல தளர்த்த துவங்கியது.. பிறகு சிறுவனை விடுவிக்கும் நிலைமைக்கு வந்தது.. பிறகு ஆழமான நீர்நிலைக்குள் சென்று முதலை மறைந்துவிட்டது..
7 அடி நீளமுள்ள முதலை
முதலை தாக்கியதிலும், கவ்வியதிலும் சிறுவனுக்கு காயம் ஏற்பட்டது.. இதனால், அந்த பகுதியிலுள்ள மருத்துவமனையில் சிறுவன் அனுமதிக்கப்பட்டான்.. அங்கு தற்போது சிகிச்சையும் பெற்று வருகிறான்.
இந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் சொல்லும்போது, சுமார் 7 அடி நீளமுள்ள அந்த முதலையை பிடிக்க அந்த கால்வாயில், 3 இடங்களில் வலை விரிக்கப்பட்டுள்ளது என்றனர்.

பீகார் கால்வாய்
இதுபோலவே, பீகார் மாநிலத்திலும் முதலை சம்பவம் நடந்துள்ளது.. மாதவபூர் என்ற கிராமத்தில் வசித்து வரும் தம்பதி சைபு -சுர்ஜனா.. சைபுவுக்கு 45 வயதாகிறது..
இந்நிலையில், சம்பவத்தன்று, சைபு, தன்னுடைய மனைவி சுர்ஜனா, மைத்துனியுடன் ஒரு கால்வாயை கடக்க முயன்றார்.. அப்போது திடீரென ஒரு முதலை பாய்ந்து வந்து, சைபுவின் காலை கடித்து இழுத்தது.. இதனால் சைபு அலறி கூச்சலிட்டார்... இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சுர்ஜனா, சிறிதும் யோசிக்காமல் தன்னுடைய புடவையை தண்ணீரில் வீசி, கணவரை இறுக்கமாக பிடித்து கொள்ள சொன்னார்..
கம்புகளுடன் திரண்ட மக்கள்
பிறகு முதலையை பலமாக தாக்க துவங்கினார்.. அதற்குள் இவர்களின் அலறல் சத்தத்தை கேட்டு அந்த பகுதியிலிருந்தவர்கள் கையில் கம்புகளை எடுத்து கொண்டு விரைந்து வந்தனர்.. அனைவரும் மொத்தமாக சேர்ந்து முதலையை கம்புகளால் தாக்கினர். இதனால் நிலைகுலைந்த முதலை, சைபுவை தன்னுடைய பிடியிலிருந்து விடுவித்தது..
எனினும், முதலை கவ்வியதில் காயமடைந்த சைபு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். தற்போது வடமாநிலங்களில் கனமழை பெய்து வருவதால், ஆறுகள், கால்வாய்களில் நீர்மட்டம் பெருகி காணப்படுகிறது.. இதனால் முதலைகள் வெள்ளத்தில் அடித்து வரப்படலாம் என்கிறார்கள்..
தொடர்ந்து நீர் வற்றாத நிலையில், நீர்நிலைகளை விட்டு முதலைகள் வெளியேறி குடியிருப்பு பகுதிகளில் நுழையவும் வாய்ப்புள்ளதால் கவனமாக இருக்கும்படி வனத்துறையினர் அறிவுறுத்தியிருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications