விமானத்தில் அழுத 3 வயது குழந்தை.. தகாத வார்த்தைகளால் திட்டி இறக்கி விடப்பட்ட இந்திய குடும்பம்!
குழந்தை அழுததால் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் இருந்து இந்திய குடும்பம் இறக்கிவிடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி: 3 வயது குழந்தை அழுததால் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் இருந்து இந்திய குடும்பம் இறக்கிவிடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லண்டனில் இருந்து பெர்லின் நகருக்கு பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் கடந்த 23ஆம் தேதி புறப்பட்டது. அந்த விமானத்தில் இந்திய குடும்பத்தினரும் பயணம் செய்துள்ளனர்.
அப்போது ஒரு இந்திய குடும்பத்தை சேர்ந்த 3 வயது ஆண் குழந்தை விமானம் புறப்பட தொடங்கியதும் அழ ஆரம்பித்துள்ளது. குழந்தையின் பெற்றோர் மற்றும் சக இந்திய பயணிகள் குழந்தைக்கு பிஸ்கட் உள்ளிட்டவற்றை கொடுத்து சமாளிக்க முயன்றனர்.
மிரட்டிய ஊழியர்
ஆனால் குழந்தை தொடர்ந்து அழுது கொண்டே இருந்துள்ளான். மேலும் விமான ஊழியர்கள் குழந்தையின் அழுகையை நிறுத்துவதற்காக மிரட்டியுள்ளனர்.
தகாத வார்த்தையால்
இதனால் பயந்துபோன குழந்தை அதிகமாக அழுதுள்ளான். இதையடுத்து மீண்டும் குழந்தையிடம் வந்த விமான ஊழியர், நீ அழுது கொண்டே இருந்தால் ஜன்னல் வழியாக வெளியே தூக்கி போட்டுவிடுவேன் என தகாத வார்த்தையால் திட்டியுள்ளார்.
திரும்பிய விமானம்
ஆனால் குழந்தையின் அழுகை ஓய்ந்தபாடில்லை. இதையடுத்து மீண்டும் விமான நிலையத்துக்கு திரும்பியது விமானம்.
இறக்கிவிடப்பட்ட இந்திய குடும்பங்கள்
சம்பந்தப்பட்ட மற்றும் பிஸ்கட்களை கொடுத்த மற்றொரு இந்திய குடும்பத்தின் போர்டிங் பாஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டு இரண்டு குடும்பத்தினரும் விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்டனர்.
மத்திய அமைச்சருக்கு கடிதம்
இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட குழந்தையின் தந்தை மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் விமான ஊழியர்கள் இனவாத கருத்துக்களைப் பயன்படுத்தி, இந்தியர்களைப் பற்றி bloody போன்ற தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தி திட்டியுள்ளனர்.
தீவிரமாக விசாரிக்கிறோம்
இதுதொடர்பாக விசாரித்து, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் இதுகுறித்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. பயணிகளின் இதுபோன்ற குற்றச்சாட்டுக்களை நாங்கள் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம், எந்த விதமான பாகுபாட்டையும் பொறுத்துக்கொள்ள முடியாது. நாங்கள் முழு விசாரணையை ஆரம்பித்துள்ளோம், வாடிக்கையாளருடன் நேரடியாக தொடர்பு கொண்டுள்ளோம், என பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.