எல்லையை காக்கப் போகும் பெண் பாதுகாப்பு படையினர்
டெல்லி: இந்தியாவின் வடகிழக்கு எல்லைப் பகுதியில் குற்றச் செயல்களில் ஈடுபடும் பெண்களை பிடிக்க விரைவில் பெண் எல்லை பாதுகாப்பு படையினர் பணியமர்த்தப்படவிருக்கின்றனர்.
இது குறித்து எல்லைப் பாதுகாப்பு படை துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் பி.எஸ். ராவத் கூறுகையில்,
வங்கதேசத்துடனான திரிபுரா எல்லையில் விரைவில் 30 எல்லை பாதுகாப்பு படை பெண் கான்ஸ்டபிள்கள் பணியமர்த்தப்படுவார்கள். மேலும் 30 பேர் அஸ்ஸாம் எல்லை பகுதிக்கு அனுப்பப்படுவார்கள். அவர்கள் எல்லை வழியாக வரும் சந்தேகப்படும்படியான பெண்களிடம் சோதனை செய்வதுடன் விசாரணை நடத்துவார்கள்.
இத்தனை நாட்களாக எல்லையில் ஆண் வீரர்கள் இருப்பதால் அவர்களால் சந்தேகத்திற்கிடமாக வரும் பெண்களை சோதனை செய்ய முடியவில்லை. இந்தியா-வங்கதேச எல்லையில் கடத்தல் பொருட்களை எடுத்து வருபவர்களில் பெரும்பாலானோர் பெண்களே. ஏற்கனவே மேற்கு வங்கம் மற்றும் பஞ்சாப் எல்லையில் பெண் எல்லை பாதுகாப்பு படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.
எல்லையில் நடக்கும் குற்றங்களை தடுக்க அவர்கள் தேவைப்படுகிறார்கள். ஏனென்றால் பெண்கள் வெடிகுண்டுகள் உள்ளிட்டவற்றை எல்லை வழியாக கடத்தி வரக்கூடும் என்றார்.