பெங்களூருவில் பாதி எரிந்த பஸ்ஸை மறுநாளும் வந்து எரித்த வன்முறை கும்பல்!
பெங்களூரு: பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட நிலையிலும் பெங்களூருவில் பாதி எரிந்த நிலையில் இருந்த எஸ்.ஆர்.எஸ். பேருந்தை வன்முறை கும்பல் நேற்று மீண்டும் தீ வைத்து வெறியாட்டம் போட்டுள்ளது.
காவிரியில் தமிழகத்துக்கு நீரை திறந்துவிட்டாக வேண்டும் என்று உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக உத்தரவிட்டது. இந்த உத்தரவு செய்தி வந்ததுதான் தாமதம் பெங்களூரு நகரில் தமிழர்கள் தேடி தேடி தாக்கப்பட்டனர்.
தமிழக நிறுவனங்கள் எங்கெல்லாம் தென்படுகிறதோ அங்கெல்லாம் கல்வீச்சு சூறை... தமிழக வாகனங்கள் தென்பட்டாலே போதும்... ஓடி ஓடி தாக்கி மகிழ்ந்தனர் வன்முறையாளர்கள்..
ஒரே நாளில் தீக்கிரை
நேற்று முன்தினம் ஒரே நாளில் பெங்களூருவில் 25 லாரிகள், 52 பேருந்துகள் தீக்கிரையாக்கப்பட்டன... நூற்றுக்கணக்கான வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன..
துணை ராணுவம்
பெங்களூர் டிம்பர் யார்டு பகுதியில் நிறுத்தப்பட்ட பேருந்துகள் ஒட்டுமொத்தமாக எரிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து 144 தடை உத்தரவு, ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டன. துணை ராணுவப் படை பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டது.
மீண்டும் எரிப்பு
ஆனாலும் பெங்களூர் டிம்பர் யார்டு லேவுட்டில் பாதி எரிந்த நிலையில் இருந்த பேருந்து ஒன்றை வன்முறை கும்பல் மீண்டும் நேற்று தீ வைத்து முழுமையாக எரித்தது. அதேபோல் தமிழக பதிவெண் லாரிகளும் நேற்றும் தீ வைத்து எரிக்கப்பட்டன.
தொடரும் வன்முறை
துணை ராணுவப் படையின் பாதுகாப்பை மீறி தொடர்ந்து கன்னட அமைப்புகள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றன.