இடைத்தேர்தல்: கலவர பூமி முசாபர்நகரில் பாஜக வெற்றி.. உ.பி.யில் சமாஜ்வாதிக்கு பலத்த அடி
டெல்லி: கலவர பூமியாக அறியப்பட்ட உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் தொகுதியில் நடந்த இடைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. ஆளும் சமாஜ்வாதி கட்சிக்கு அம்மாநில இடைத்தேர்தல் முடிவுகள் பின்னடைவை கொடுத்துள்ளன.
கர்நாடகா, மகாராஷ்டிரா, பஞ்சாப், பீகார், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் காலியாக இருந்த சட்டசபை தொகுதிகள் பலவற்றுக்கு கடந்த 13ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.
தேர்தல் நடைபெற்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. உ.பி மாநிலத்தின் முசாபர் நகர் தொகுதியில் பாஜக வேட்பாளர் 6 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இது இரு வருடங்கள் முன்பு இந்து-முஸ்லிம் கலவரத்தால் ரத்தம் சிந்திய தொகுதி.
உ.பி மாநிலத்தின் டியோபேன்ட் தொகுதியில், 3400 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவ்விரு தொகுதிகளிலும் ஆளும் சமாஜ்வாதி கட்சி தோல்வியடைந்துள்ளது. அடுத்த வருடம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சமாஜ்வாதி கட்சிக்கு இடைத்தேர்தல் முடிவுகள் எச்சரிக்கை மணியாக மாறியுள்ளன.
பஞ்சாப்பிலுள்ள காதூர் சாகிப் தொகுதியில், பாஜக தோழமை கட்சியான ஷிரோன்மணி அகாலிதளம் 65 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.