டெல்லி ஏர்போர்ட்டில் 6 விமானங்களில் குண்டு வெடிக்கும்: போன் மூலம் மிரட்டல்
டெல்லி: டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் இருந்து புறப்படும் ஜெட் ஏர்வேஸ் உள்பட 6 விமானங்களில் குண்டு வைக்கப்பட்டதாக வந்த போன் அழைப்பால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
மேற்கு டெல்லியில் இருக்கும் பஷிம் விஹார் பகுதியில் செயல்படும் ஹோட்டல் ஒன்றுக்கு ஞாயிற்றுக்கிழமை மதியம் 3 மணிக்கு போன் அழைப்பு வந்துள்ளது. எடுத்துப் பேசியபோது மறுமுனையில் பேசியவர் டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் இருந்து புறப்படும் ஜெட் ஏர்வேஸ் உள்பட 6 விமானங்களில் குண்டுகள் வைக்கப்பட்டுள்ளன என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார்.

உடனே இது குறித்து விமான நிலைய அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விமான நிலையத்தில் இருந்து கிளம்பவிருந்த விமானங்களில் குண்டு ஏதாவது உள்ளதா என்று தீவிர சோதனை செய்யப்பட்டது. சோதனையில் குண்டு எதுவும் சிக்கவில்லை. அந்த நபர் பொய் சொல்லியது தெரிய வந்தது.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் நாட்டில் உள்ள பல்வேறு விமான நிலையங்களுக்கு பலமுறை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. கடந்த 22ம் தேதி பிரஸ்ஸல்ஸ் விமான நிலையத்தில் தற்கொலைப்படை தாக்குதல் நடந்த சில மணிநேரத்தில் ஜெட் ஏர்வேஸ் விமானங்களுக்கு போன் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 23ம் தேதி 11 இன்டிகோ விமானங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டதாக அமெரிக்காவில் இருந்து வந்த போன் அழைப்பால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications