7வது கட்ட லோக்சபா தேர்தல்: 9 மாநிலங்களில் 89 தொகுதிகளில் பிரசாரம் ஓய்ந்தது!!
டெல்லி: 7வது கட்ட லோக்சபா தேர்தல் நடைபெறும் 9 மாநிலங்களின் 89 தொகுதிகளில் இன்று மாலையுடன் பிரசாரம் நிறைவடைந்துள்ளது.
நாட்டின் 16வது லோக்சபாவுக்கான தேர்தல் 9 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை மொத்தம் 6 கட்ட தேர்தல் நடைபெற்றுள்ளது. இதில் 349 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு முடிவடைந்துள்ளது.
89 தொகுதிகள்
7வது கட்ட தேர்தல் நாளை மறுநாள் 7 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 89 தொகுதிகளில் நடைபெற உள்ளது.
ஆந்திராவின் 119 சட்டசபை தொகுதிகளுக்கும்..
அதேபோல் ஆந்திர மாநிலத்தின் 119 சட்டசபை தொகுதிகளுக்கும் 30-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
எந்தெந்த மாநிலங்களில்?
குஜராத்தின் மொத்தமுள்ள 26 தொகுதிகளிலும், ஆந்திராவில் 17, உத்தரப்பிரதேசத்தில் 14, பஞ்சாபில் 13, மேற்கு வங்கத்தில் 9 தொகுதிகளிலும் பீகாரில் 7 தொகுதிகளுக்கும், ஜம்மு காஷ்மீர், யூனியன் பிரதேசங்களான தத்ரா நகர் ஹவேலி, டாமன் மற்றும் டயூ ஆகியவற்றில் தலா ஒரு தொகுதிக்கும் நாளை மறுநாள் தேர்தல் நடைபெற உள்ளது.
பிரசாரம் ஓய்வு
இத்தொகுதிகளில் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்ந்ததால் பகல் முழுவதும் இறுதிகட்ட பிரசாரம் தீவிரமாக நடைபெற்றது.
சோனியா, மோடி..
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பாரதிய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, அக்கட்சி தலைவர் ராஜ்நாத் சிங், அருண் ஜேட்லி, மத்திய அமைச்சர் பரூக் அப்துல்லா உள்ளிட்டோர் 7வது கட்ட தேர்தல் களத்தில் இருக்கும் பிரபலங்கள்.