இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தல்: எப்படியும் வெல்லும் ஆசையில் பாஜக, காங்.! இன்றுடன் ஓய்ந்தது பிரசாரம்!
சிம்லா: இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவடைந்தது. இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தல் நாளை மறுநாள் நவம்பர் 12-ந் தேதி நடைபெற உள்ளது.
68 தொகுதிகளைக் கொண்டது இமாச்சல பிரதேச சட்டசபை. இம்மாநிலத்தில் பெரும்பான்மைக்கு தேவை 35 இடங்கள். இமாச்சல பிரதேசத்தைப் பொறுத்தவரை ஆளும் பாஜக, காங்கிரஸ் இடையேதான் கடும் போட்டி. இம்முறை ஆம் ஆத்மியும் களமிறங்கி இருக்கிறது.

கருத்து கணிப்புகள்
இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தல் முடிவுகள் தொடர்பான கருத்து கணிப்புகள், தொடக்கத்தில் பாஜக ஆட்சியை தக்க வைக்கும் என கூறின. பின்னர் பாஜக- காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவும் என்றன. ஒரு கட்டத்தில் இமாச்சல பிரதேசத்தில் தொங்கு சட்டசபைக்கு சாத்தியம் இருப்பதாகவும் கருத்து கணிப்புகள் தெரிவித்தன.

காங். நம்பிக்கை
இமாச்சல பிரதேச மாநில தேர்தல் வரலாற்றில் ஆளும் கட்சி, அடுத்த தேர்தலில் மீண்டும் வென்றதாக சரித்திரம் இல்லை. ஒருமுறை ஆளும் கட்சி வென்றால் அடுத்த தேர்தலில் எதிர்க்கட்சி வெல்வது வாடிக்கை. இதனால் இமாச்சல பிரதேசத்தில் பாஜகவை வீழ்த்த முடியும் என பெரும் நம்பிக்கையுடன் இருக்கிறது காங்கிரஸ்.

பாஜக எதிர்பார்ப்பு
இன்னொரு பக்கம், பிரதமர் மோடி மீதான மதிப்பு, மத்திய பாஜக அரசின் நலத் திட்டங்கள் உள்ளிட்டவை தங்களுக்கு கை கொடுக்கும் என கனவு காண்கிறது பாஜக. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உட்பட மத்திய அமைச்சர் பட்டாளங்கள் இமாச்சலப் பிரதேசத்தில் முற்றுகையிட்டு தீவிர பிரசாரம் செய்தனர்.

பிரியங்கா வாக்கு வேட்டை
காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கடைசிகட்டத்தில் இமாச்சல பிரதேச தேர்தலில் தீவிரமாக இறங்கினார். இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் இறுதி நாளனா இன்று ஒரே நேரத்தில் 68 தொகுதிகளிலும் பிரசார கூட்டத்தை நடத்தியது காங்கிரஸ். அத்துடன் பிரியங்கா காந்தி வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.

காங். வாக்குறுதி
இமாச்சல பிரதேச தேர்தல் பிரசாரத்தில் பேசிய பிரியங்கா காந்தி, அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டத்தை காங்கிரஸ் அரசு அமல்படுத்தும் என வாக்குறுதி அளித்தது திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. மேலும் பெண்களுக்கு ரூ1,500 உதவித் தொகை, தொழில் தொடங்க இளைஞர்களுக்கு ரூ680 கோடி நிதி உதவி என வாக்குறுதிகளை வாரி இறைத்துள்ளது காங்கிரஸ். இமாச்சல பிரதேசத்தில் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்ந்தது. இம்மாநிலத்தில் நாளை மறுநாள் நவம்பர் 12-ந் தேதி வாக்குப் பதிவு ஒரே கட்டமாக நடைபெறுகிறது. பின்னர் ஒரு மாதம் கழித்து டிசம்பர் 8-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.












Click it and Unblock the Notifications