மாறி மாறி கட்சி தாவல்.. குஜராத் சட்டசபை தேர்தலில் என்ன நடக்கிறது? எந்த கட்சிக்கு சாதகம்?
காந்திநகர்: குஜராத்தில் தேர்தல் களம் சூடுடிபித்துள்ள நிலையில், பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியில் 'சீட்' கொடுக்கப்படாமல் ஒதுக்கப்பட்டவர்கள் ஆம் ஆத்மியிலும் வேறு சில கட்சிகளிலும் போட்டியிட முன்வந்துள்ளனர். ஆனால் இவ்வாறு கட்சி மாறி போட்டியிடுவதால் வெற்றிபெற முடியுமா? என்கிற கேள்விக்கு ஆய்வு ஒன்று பதிலளித்துள்ளது.
அதாவது, இவ்வாறு கட்சி மாறியவர்களில் எத்தனை பேர் வெற்றிபெற்றுள்ளனர். இது சொந்த கட்சியை எந்த அளவு பாதித்துள்ளது என்பது குறித்து ஆய்வு விவரித்துள்ளது.
இது குறித்து தகவல்களை அசோக பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இதில் 1980களிலிருந்து நடைபெற்ற தேர்தல் விவரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

தேர்தல்
குஜராத் மாநில தேர்தல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஏனெனில் கடந்த 27 ஆண்டுகளாக இம்மாநிலத்தில் தொடர்ந்து பாஜக ஆட்சியில் இருந்து வருகிறது. மட்டுமல்லாது குஜராத்தை நான்தான் கட்டமைத்தேன் என்று பிரதமர் மோடி பெருமிதம் கூறி வருகிறார். இந்த தேர்தலில் வென்று பாஜக ஆட்சியை தக்கவைக்குமா? அல்லது காங்கிரஸ் இதனை முறியடிக்குமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் பல தொகுதிகளில் பாஜக புது முகங்களை களமிறக்கியுள்ளது. காங்கிரஸில் புது முகங்களுக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை.

ஆய்வு
இவ்வாறு இருக்கையில் அங்கிருந்து இங்கேயும், இங்கிருந்து அங்கேயும் பல முக்கிய தலைகள் கட்சி மாறியுள்ளன. ஆனால் கட்சி மாறிய தலைகளுக்கும் சீட் ஒதுக்கப்படாமல் ஒதுக்கிவைக்கப்பட்ட சம்பவமும் அரங்கேறியுள்ளது. இப்படி கட்சி மாறிய பிரமுகர்கள் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெறுவார்களா? என்கிற சந்தேகம் இரு கட்சி தலைமைக்கும் நீடித்து வருகிறது. இந்த சந்தேகத்திற்கு, அசோக பல்கலைக்கழகத்திற்கான அரசியல் தரவுகளுக்கான திரிவேதி மையத்தின் ஆய்வு முடிவுகள் பதிலளித்துள்ளன. இந்த ஆய்வில் கடந்த 1980களிலிருந்து இவ்வாறு கட்சி மாறி போட்டியிட்டவர்கள் எத்தனைப்பேர்? அதில் வென்றவர்கள் எத்தனை பேர் என்பது குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இதனை தனியார் செய்தி ஊடகம் விரிவாக எழுதியுள்ளது.

கட்சி தாவல்
அதாவது, கடந்த 1980ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 116 பேர் இவ்வாறு கட்சி மாறி போட்டியிட்டுள்ளனர். அவர்களில் வெறும் 27 பேர்தான் வெற்றிபெற்றுள்ளனர். வெற்றி விகிதம் 23.3%. அடுத்து 1985ம் ஆண்டு தேர்தலில் 31 பேர் கட்சி மாறி போட்டியிட்டனர். இதில் 11 (35.5%) பேர் வெற்றிபெற்றனர். 1990ம் ஆண்டு தேர்தலில் 66 பேர் கட்சி மாறி போட்டியிட்டனர். அவர்களில் 31 (47%) பேர் வென்றனர். 1995ம் ஆண்டு 100 பேர் கட்சி மாறி போட்டியிட்டனர். இதில் 41 (41%) பேர் வெற்றிபெற்றனர். 1998ல் 69 பேர் இவ்வாறு போட்டியிட்டதில் 9 (13%) வேட்பாளர்கள் மட்டுமே வெற்றிபெற்றனர். இதற்கடுத்து இவ்வாறு கட்சி மாறி போட்டியிட்டவர்களில் வெற்றி பெற்றவர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வந்துள்ளது. கடைசியாக கடந்த 2017ம் ஆண்டு தேர்தலில் 49 பேர் கட்சி மாறி போட்டியிட்டனர். அதில் வெறும் 6 (12.2%) பேர் மட்டுமே வெற்றிபெற்றனர்.

கடந்த 5 தேர்தல்
எனவே சொந்த கட்சியில் சீட் கொடுக்கவில்லை என்று கோவித்துக்கொண்டு வேறு கட்சியில் இணைந்து வேட்பாளராக நின்றால் ஜெயிப்பது கஷ்டம் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இதனால் சொந்த கட்சிக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது என்பதும் இதன் மூலம் தெரிய வந்துள்ளது. கடந்த ஐந்து தேர்தல் முடிவுகளை எடுத்துக்கொண்டால், இவ்வாறு 261 பேர் கட்சி மாறியுள்ளனர். ஆனால் அதில் 36 பேர் மட்டுமே வெற்றிபெற்றுள்ளனர். அதாவது 7 பேர்களில் ஒருவர்தான் வென்றுள்ளார்.

புது முகம்
இது ஒருபுறம் இருக்க மறுபுறத்தில் புதிய வேட்பாளருக்கு மக்கள் அமோக ஆதரவளித்துள்ளதும் தெரிய வந்துள்ளது. அதாவது, கடந்த 2002ம் ஆண்டிலிருந்து நான்கு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் ஆராயப்பட்டதில், 2002ம் ஆண்டு புதியதாக களத்தில் இறங்கிய வேட்பாளர்களில் 46% பேர் வெற்றிபெற்றுள்ளனர். அதேபோல 2007 மற்றும் 2012 தேர்தலில் புதியதாக களமிறக்கப்பட்டவர்கள் அனைவருமே வெற்றிபெற்றுள்ளனர். 2017ஐ பொறுத்த அளவில் புதிய வேட்பாளர்களில் 52% பேர் வெற்றிபெற்றுள்ளனர். இது மக்கள் மத்தியில் வேட்பாளரை காட்டிலும் கட்சிக்கு உள்ள முக்கியத்துவத்தையே காட்டுவதாக அமைந்துள்ளது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மீண்டும் வெற்றி
மேலும், கிளர்ச்சி செய்து வேறு கட்சிக்கு தாவும் பிரமுகர்களை மீண்டும் கட்சிக்கு அழைப்பதை விட புதிய நபர்களை நிறுத்தினால் வென்றுவிடலாம் என்றும் தெரிய வருகிறது. அதேபோல தேர்தலில் ஒருமுறை வெற்றிபெற்ற பின்னர் மீண்டும் அதே தொகுதியில் இரண்டாவது முறை போட்டியிட்டவர்களும் கணிசமான அளவில் வென்றிருக்கிறார்கள். அதாவது 2002ம் ஆண்டுக்கு முன்னர் எம்எல்ஏவாக இருந்த சிலர் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டனர். அவர்களில் 55.8% பேர் மீண்டும் வெற்றிபெற்றிருக்கிறார்கள். இந்த வெற்றி விகிதம் 2007ல் 51.9 சதவிகிதமாகவும், 2012ம் ஆண்டு 64.5 சதவிகிதமாகவும், 2017ம் ஆண்டு 64.8 சதவிகிதமாகவும் அதிகரித்துள்ளது.

வெற்றி சூத்திரம்
குஜராத் தேர்தலை பொறுத்த அளவில் ஏற்கெனவே காங்கிரசிலிருந்து பாஜகவுக்கு தாவிய அனைவருக்கும் கட்சி சீட் கொடுத்துவிடவில்லை. அதேபோல, கட்சியின் பழைய தலைக்கட்டுகள் அனைவருக்கும் சீட் கொடுக்கவில்லை. அதிலிருந்து பாதி இதிலிருந்து பாதி என பிரித்து, புதிய வேட்பாளர்களை கணிசமான அளவில் பாஜக களம் இறக்கியுள்ளது. காங்கிரசை பொறுத்த அளவில் பழைய எம்எல்ஏக்களையே கட்சி மீண்டும் களமிறக்கியுள்ளது. இந்த இரண்டு ஐடியாக்களுமே வெற்றியின் சூத்திரம்தான். எனவே தேர்தலில் யார் வெல்வார்கள் என்பதை வாக்காளர்கள்தான் இறுதி முடிவை தீர்மானிப்பார்கள்.












Click it and Unblock the Notifications