பீகார்: மோடிக்கு எதிராக தேசிய கொடி அவமதிப்பு வழக்கு
பாட்னா: பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் தேசியக் கொடியை அவமதித்ததாக பீகார் மாநில நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கடந்தாண்டு ஜூன் 21ம் தேதி நடைபெற்ற சர்வதேச யோகா தின கொண்டாட்டத்தின் போது இந்திய தேசிய கொடி போல வடிவமைக்கப்பட்டிருந்த துண்டை கழுத்தில் அணிந்தது மட்டுமின்றி , முகம்,மற்றும் கைகளை துடைக்கவும் தேசியக்கொடியை பிரதமர் மோடி பயன்படுத்தியுள்ளார்.
இதன் மூலம் அவர் தேசியக்கொடியை அவமதித்துவிட்டதாக கூறி பொக்ரைரா கிராமவாசியான பிரகாஷ் குமார் என்பவர் முசாபர்பூர் மாவட்டத்தின் முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
தனது இந்த அநாகரிக செயல் மூலம் தேசியக்கொடி மீது மரியாதை வைத்திருந்த பல்லாயிரக்கணக்கான மக்களின் மனதை மோடி புண்படுத்தியுள்ளார் என அந்த புகாரில் பிரகாஷ் குமார் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்குக்கான ஆதாரமாக,இது குறித்த புகைப்படங்களை இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்து புகாருடன் அளித்துள்ளார். இந்த வழக்கை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம்,வழக்கு விசாரணை வரும் ஜூலை 16ம் தேதி நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளது.
இதேபோல இந்தியா கேட் பகுதியில், கடந்த ஜூன் 21ஆம் தேதி, சர்வதேச யோகா தின விழா கொண்டாடப்பட்டது. அதில் பங்கேற்ற மோடி, அங்கிருந்த தேசியக் கொடியை ஒரு கைக்குட்டையைப் போல பயன்படுத்தினார். இதேபோல், தனது அமெரிக்கப் பயணித்தின்போது அந்நாட்டு அதிபர் ஒபாமாவிடும் அளித்த தேசியக் கொடியில் கையெழுத்திட்டுக் கொடுத்தார். இது தேசியக்கொடி தொடர்பான விதிமுறைகளுக்கு முரணானது.
எனவே, தேசியக் கொடியை அவமதிக்கும் விதத்தில் செயல்பட்டது தொடர்பாக, மோடி மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என ஆசிஸ் சர்மா என்பவர் டெல்லி பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.