பாரத ரத்னா விருது: பீகாரில் பிரதமர், டெண்டுல்கருக்கு எதிராக வழக்கு
இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் டெண்டுல்கருக்கு சனிக்கிழமையன்று பாரத ரத்னா விருது வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுவதை எதிர்த்து பீகாரின் முசாபர்பூர் வழக்கறிஞர் சுதிர் குமார் ஓஜா, உள்ளூர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்.
அதில் ஹாக்கி ஜாம்பவான் தயான் சந்துக்கு பாரத ரத்னா விருது வழங்காமல் சச்சினுக்கு வழங்குவது மக்களின் உணர்வுகளை புண்படுத்துவதாகும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் பிரதமர் மன்மோகன்சிங், உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே, விளையாட்டுத் துறை அமைச்சர் பன்வார் ஜிதேந்திரா சிங் உள்ளிட்டோர் மக்களின் உணர்வுகளை புண்படுத்திவிட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது.
இதை உள்ளூர் நீதிமன்ற தலைமை மாஜிஸ்திரேட் எஸ்.பி.சிங் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டார். இந்த வழக்கு மீதான விசாரணை டிசம்பர் 10-ந் தேதி நடைபெற உள்ளது. அத்துடன் இந்த வழக்கில் ஐக்கிய ஜனதா தளத்தின் எம்.பி.சிவானந்த் திவாரி சாட்சியமாக சேர்க்கப்பட்டிருக்கிறார்.
1920,30களில் தயான் சந்த் இந்திய ஹாக்கி அணிக்கு பெருமை சேர்த்ததுடன் ஒலிம்பிக்கில் இந்தியா பதக்கங்கள் பெற காரணமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.