கேந்திரிய வித்யாலயா பள்ளி லாக்கரில் ரூ.1.59 கோடி மதிப்புக்கு கட்டுக்கட்டாய் பணம், தங்க கட்டிகள்!
அகமதாபாத்: பள்ளி லாக்கர்களில் இருந்து 1 கோடி பணமும், 59 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க கட்டிகளும் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் குஜராத் மாநிலம், அகமதாபாத் நகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அகமதாபாத் நகரின், சந்த்கீதா பகுதியிலுள்ளது கேந்திரிய வித்யாலயா பள்ளி. இப்பள்ளியில் நேற்று மாலை, துப்புரவு பணிகள் நடந்தன. அப்போது ஆசிரியர்கள் தங்களது பொருட்களை சேர்த்து வைக்க பயன்படுத்தும் லாக்கர்களை திறந்து துப்புரவு பணியாளர்கள் துடைத்துக் கொண்டிருந்தனர். அதில் ஐந்து லாக்கர்களை மட்டும் திறக்க முடியவில்லை. அதன் சாவிகள் யாரிடம் உள்ளன என்பதையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

எனவே பள்ளி முதல்வர், அவதேஷ்குமார், அந்த ஐந்து லாக்கர்களையும் உடைத்து திறக்குமாறு ஊழியர்களை கேட்டுக் கொண்டார். அதன்படி லாக்கர்களை உடைத்தபோது, அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில், கட்டுக்கட்டாய் பணமும், தங்க கட்டிகளும் உள்ளே இருந்தன.
மொத்தம் ரூ.1 கோடி பணமும், 59 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க கட்டிகளும் உள்ளேயிருந்தது தெரியவந்தது. அந்த பணமும், தங்கமும் யாருடையது என்று ஒவ்வொரு ஆசிரியர்களிடமும், பள்ளி முதல்வர் விசாரித்துள்ளார்,. யாருமே உரிமை கொண்டாட முன்வரவில்லை. எனவே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள், பணத்தையும், தங்கத்தையும் பறிமுதல் செய்தனர்.
குமார் கூறுகையில், "நான் பள்ளி முதல்வராகி 2 வருடங்கள் ஆகியுள்ளன. அதன்பிறகு இந்த லாக்கர்களை யாரும் பயன்படுத்தவில்லை. இந்த லாக்கர்களை எந்த ஆசிரியர் பயன்படுத்தினார் என்பதற்கான ஆவணங்களும் இல்லை" என்றார்.
இதனிடையே வரி ஏய்ப்பு தொடர்பான கோணத்தில் வருமான வரித்துறையும் விசாரணையை தொடங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications