காவிரி மேல்முறையீட்டு வழக்கு... 3 நீதிபதிகள் கொண்ட புதிய அமர்வு அறிவிப்பு
டெல்லி: காவிரி மேல்முறையீட்டு வழக்கை விசாரிக்கும் உச்சநீதிமன்ற 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமித்தவராய், கான்வில்கர் அமர்வு இந்த வழக்கை விசாரிக்கும் எனவும் உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு இடையில் காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டு நிலுவையில் உள்ளன. ஏற்கனவே இதுகுறித்து சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை ஏற்று கர்நாடக அரசு தமிழகத்துக்கு உரிய காவிரி நீரை திறந்துவிடவில்லை.
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக தீர்ப்பாயம் அளித்த இறுதி தீர்ப்பின்படி காவிரி கண்காணிப்பு குழு அமைத்து, கர்நாடக அரசு தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று தனியாக ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. காவிரி நதியின் குறுக்கில் கர்நாடக அரசு புதிய அணைகளை கட்டுவதற்கு தடை விதிக்கக்கோரியும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதுபோன்ற காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான பல மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் நீண்டகாலமாக நிலுவையில் உள்ளன.
காவிரி நீர் பங்கீடு தொடர்பான அனைத்து வழக்குகளையும் ஒன்றாக விசாரிக்கும் வகையில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ஜே.செல்லமேஸ்வர், சிவகீர்த்தி சிங் மற்றும் ஏ.எம்.சப்ரே ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக சுப்ரீம் கோர்ட்டு அறிவித்து இருந்தது.
அதன்படி இந்த மனுக்களை விசாரிக்க நீதிபதிகள் ஜே.செல்லமேஸ்வர், சிவகீர்த்தி சிங், ஏ.எம்.சப்ரே ஆகியோர் அடங்கிய அமர்வை சுப்ரீம் கோர்ட்டு நிர்ணயித்தது. இதனிடையே இந்த அமர்வுக்கு தலைமையேற்ற நீதிபதி ஜே.செல்லமேஸ்வர் இந்த வழக்கின் விசாரணையில் இருந்து தன்னை விலக்கிக்கொள்வதாக அறிவித்தார்.
இதையடுத்து காவிரி பிரச்சினை தொடர்பான வழக்கை விசாரிக்க புதிய அமர்வை ஏற்படுத்துமாறு தலைமை நீதிபதியிடம் கர்நாடக அரசு வழக்கறிஞர் கோரிக்கை விடுத்திருந்தனர்.
கர்நாடக தரப்பின் இந்த கோரிக்கையை ஏற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, காவிரி பிரச்சனை தொடர்பான வழக்கை வேறு நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரிக்கும் என அறிவித்திருந்தார். இந்நிலையில் காவிரி தொடர்பான வழக்கை விசாரிக்க புதிய அமர்வு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமித்தவராய், கான்வில்கர் ஆகியோர் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரிக்கும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த வழக்கு விசாரணை வரும் அக்டோபர் 18ம் தேதியன்று நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.