காவிரி விவகாரம்: தமிழக எம்பிக்களை சந்திக்க மறுத்த பிரதமர் மோடி- செயலரிடம் மனு கொடுத்தனர்!
டெல்லி : காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தி பிரதமர் அலுவலகத்தில் அதிமுக எம்.பிக்கள் நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் மனு அளித்துள்ளனர். அதிமுக எம்.பிக்களின் மனுவை பிரதமர் அலுவலக செயலர் மனுவை பெற்றுக்கொண்டுள்ளார்.
முன்னதாகஅதிமுக எம்.பிக்கள் நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்திடமும் மனு அளிக்க அதிமுக எம்.பி.க்கள் திட்டமிட்டுள்ளனர்.
தமிழகத்துக்கு தேவையான காவிரி நீரை திறந்து விடும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், இவ்வழக்கில் தொடர்ந்து உச்சநீதி மன்ற தீர்ப்பினை மீறும் வகையில் கர்நாடக அரசு செயல்பட்டு வருகிறது. கர்நாடக அரசின் இந்த செயலை கடுமையாக கண்டித்த உச்சநீதிமன்றம் அக்.4ஆம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்நிலையில், மத்திய அரசு தரப்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் உத்தரவை வாபஸ் பெறும்படி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசு மறுப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. அம்மனு மீதான் விசாரணை இன்று நடைபெறவுள்ளது. இதன் காரணமாக தமிழக அரசின் சார்பில் துணை சபாநாயகர் தம்பிதுரை தலைமையில் அனைத்து அதிமுக எம்.பி.க்களும் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்திக்க திட்டமிட்டனர். ஆனால் அதிமுக எம்.பிக்களை சந்திக்க பிரதமர் நேரம் ஒதுக்கவில்லை.
இதனையடுத்து இன்று காலையில் நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து பிரதமர் அலுவலகம் வரை பேரணியாக சென்றனர். பின்னர் பிரதமர் அலுவலகம் முன்பு இருந்த பாதுகாவலர்கள் அதிமுக எம்.பிக்களை தடுத்து நிறுத்தினர். இதனால் பரபரபரப்பு ஏற்பட்டது. அரைமணிநேரம் பிரதமர் அலுவலக வாயிலில் காத்திருந்த அதிமுக எம்.பிக்கள், பின்னர் பிரதமர் அலுவலகத்திற்குள் சென்று மனு அளித்தனர்.
இந்த மனுவில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தவுள்ளதாகவும், காவிரி நீர் திறப்பை உறுதி செய்யவும் கோரிக்கை வைத்துள்ளதாகவும் அதிமுக எம்.பி தம்பித்துரை கூறியுள்ளார். உமாபாரதியை சந்தித்து மனு அளித்துள்ளதாகவும் தம்பித்துரை தெரிவித்துள்ளார்.