காவிரி: திட்டமிட்டபடி இன்று முழுவதும் ரயில் மறியல் நடைபெறும்- வாட்டாள் நாகராஜ்
பெங்களூரு: தமிழகத்துக்கு காவிரி நீரை திறக்க எதிர்ப்பு தெரிவித்து இன்று திட்டமிட்டபடி ரயில் மறியல் நடைபெறும் என்று கன்னட சளுவாலி கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அடுத்து பெங்களூரில் பெரும் கலவரம் நடந்தது. அப்போது வாட்டாள் நாகராஜ் செப்டம்பர் 15ம் தேதி கர்நாடகாவில் முழு அடைப்பு நடத்தப்படும் என்று அறிவித்தார். இந்நிலையில், திடீரென பந்த் இல்லை என்றும் ரயில் மறியல்தான் நடத்த உள்ளோம் என்றும் கூறியிருந்தார்.
அதன் அடிப்படையில், இன்று திட்டமிட்டபடி ரயில் மறியல் நடத்தப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். மாநிலம் முழுவதும் ரயில் மறியலில் 1 லட்சம் பேர் பங்கேற்று ரயிலை மறிப்போம் என்றும் வாட்டாள் நாகராஜ் தெரிவித்துள்ளார். காலை 6 மணியில் இருந்து மாலை 6 மணி வரை இந்த ரயில் மறியல் நடைபெறும். இதனால், இன்று யாரும் ரயிலில் பயணம் செய்ய முடியாது. இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும். அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்து வருகின்றனர்.
பெரும் கலவரத்திற்கு பின்னர், நேற்றுதான் பெங்ளூருவில் இயல்பு நிலை திரும்பிக் கொண்டிருக்கிறது. கர்நாடகாவில் உள்ள அனைத்து பேருந்துகளும் நேற்று வழக்கம் போல் ஓடின. எனினும் தமிழகத்திற்கு செல்லும் பேருந்துகள் மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அரசு பள்ளிகள், கல்லூரிகள் வழக்கம் போல் செயல்பட்டன. என்றாலும் தனியார் பள்ளிகள் தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்றைய ரயில் மறியல் போராட்டம் மீண்டும் கர்நாடகா மக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கும் அபாயம் உள்ளது.