தூக்கியடிப்போம்.. கர்நாடக காவிரி மனு விவாதத்தில் சீறிய சுப்ரீம் கோர்ட் நீதிபதி
டெல்லி: நாங்கள் தூக்கியடிக்கத்தான் வழக்கை முன்கூட்டியே கொண்டுவருகிறோம்.. என்று சுப்ரீம் கோர்ட் நீதிபதி கடுமையான வார்த்தைகளால் கர்நாடகாவின் நிலைப்பாட்டை சாடியுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பொறுப்பு நாடாளுமன்றத்திற்குத்தான் உள்ளது என்றும் இதில் சுப்ரீம் கோர்ட் தலையிட வேண்டாம் என்றும் மத்திய அரசின் அட்டார்னி ஜெனரல் இன்று, சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனுவை தாக்கல் செய்தார். இம்மனுவை விரைந்து விசாரணைக்கு எடுக்க வேண்டும் என நீதிபதிகள் அமித் மிஸ்ரா மற்றும் லலித் குமார் அமர்வு முன்னிலையில் கேட்டுக்கொண்டார்.
இதற்கு, தமிழக அரசின் வழக்கறிஞர் சேகர் நாப்தே எதிர்ப்பு தெரிவித்தார். கர்நாடகா இன்னும், தண்ணீர் விடவில்லை, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க ஒத்துழைக்கவில்லை. இப்படியுள்ள சூழ்நிலையில், இந்த மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டாம் என்றார்.
தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட்டீர்களா என, அப்போது கர்நாடக தரப்பு வக்கீல்களை பார்த்து நீதிபதி அமித் மிஸ்ரா கேள்வி எழுப்பினார். அவர்கள் இல்லை என்றனர். மேலும், அந்த உத்தரவை சீராய்வு செய்ய மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளதால் இன்னும் தண்ணீர் திறக்கவில்லை என கூறினர்.
நீங்கள் உச்சநீதிமன்ற உத்தரவை மதிக்க மாட்டீர்கள். ஆனால் சீராய்வு மனுவை மட்டும் தாக்கல் செய்வீர்கள், அப்படித்தானே என நீதிபதி பதிலுக்கு கேட்டார்.
இதையடுத்து மனு மீதான விசாரணை நாளைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர். இதற்கு சேகர் நாப்தே எதிர்ப்பு தெரிவித்தார். உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காத தரப்பு தாக்கல் செய்யும் மனுவை விரைந்து விசாரிக்க கூடாது என்றார் நாப்தே.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி லலித் குமார், நான் வேண்டுமென்றுதான் முன்கூட்டியே விசாரிக்கிறோம். அதை தூக்கியடிக்கத்தான் முன்கூட்டியே விசாரிக்கப்போகிறோம் என்றார்.
நீதிபதிகள் இவ்வாறு கூறியுள்ள நிலையில்தான், நீதிமன்ற கோபத்திற்கு அஞ்சி, தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.