காவிரி வன்முறையால் சர்வதேச அளவில் பெங்களூர் பெயர் தூள் தூள்...'கலவரத்தில்' தொழில்துறை!
பெங்களூர்: சிலிக்கான் வேலி என்ற இமேஜை சமீபத்திய காவிரி கலவரம் முற்றிலும் சிதைத்துவிட்டதாகவும், தொழில்துறையினர் வெளியே கிளம்ப தயாராகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
காவிரி நதிநீர் வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து கர்நாடகாவில், அதிலும் குறிப்பாக பெங்களூரில் திங்கள்கிழமை பெரிய அளவில் கலவரம் வெடித்தது.
தமிழக பதிவெண் கொண்ட லாரி, பஸ்கள் தேடி தேடி எரிக்கப்பட்டன. சுமார் 100 வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டு ஊரே பற்றி எரிவதை போல காட்சியளித்தது.
ஊரடங்கு
இந்த பெரும் கலவரத்தால் 16 காவல் நிலைய எல்லைகளில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது. நகரம் முழுக்க தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நேற்றும் ஆங்காங்கு சிறு சிறு கலவரங்கள் நடந்துள்ளன. இன்றுதான் ஓரளவுக்கு சகஜ நிலை திரும்பியுள்ளது. ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது.
25 ஆயிரம் கோடி
இந்நிலையில், பெங்களூர் கலவரம், பந்த் போன்றவற்றால் பெங்களூருக்கு ரூ.22 ஆயிரம் கோடி முதல் ரூ.25 ஆயிரம் கோடி வரை நஷ்டமாகியுள்ளதாக இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபை தெரிவித்துள்ளது.
சிலிக்கான்வேலி
பெங்களூர் என்பது சிலிக்கான் வேலி என்று அழைக்கப்படும் அளவுக்கு இமேஜ் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் இப்படி ஒரு கலவரம் நடந்துள்ளது என்பது, அதன் நற்பெயரை முற்றாக குலைத்துவிட்டது என்று வர்த்தகசபை செயலாளர் ராவத் கூறுகிறார்.
பல துறைகள்
ஐடி, சுற்றுலா, விமான சேவை துறைகளில், பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக வர்த்தசபை தெரிவிக்கிறது. சரக்கு போக்குவரத்து, ரெஸ்டாரண்ட், சினிமா தொழில்களும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால்தான் இழப்பு கால் லட்சம் கோடி அளவுக்கு போயுள்ளதாகவும் கூறுகிறது அந்த அமைப்பு.
பெரிய நகரம்
வளர்ந்து வரும் பொருளாதார நாடு இந்தியா. அந்த நாட்டின் முக்கியமான தொழில் நகரம் ஒன்றில் இதுபோல கலவரம் நடைபெறுவது பெரும் பின்னடைவை ஏற்படுத்திவிடும் என்று அந்த அமைப்பு எச்சரிக்கிறது.
கஷ்டப்பட்ட ஊழியர்கள்
பிளிப்கார்ட், இன்போசிஸ் போன்ற உலக புகழ் பெற்ற பல நிறுவனங்கள் பெங்களூரில் அமைந்துள்ளன. கலவர நாட்களில் தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தே பணியாற்றிக்கொள்ள அவை அனுமதித்தன. அமேசான் நிறுவன ஊழியர்கள் திங்கள்கிழமை, அலுவலகத்திற்கு உள்ளேயே சிக்கிக்கொண்டது குறிப்பிடத்தக்கது.