ஒரே நபர்.. மமதாவின் தர்ணா முதல் சிபிஐ கைது வரை.. இவர்தான் காரணம்.. யார் தெரியுமா?
மேற்கு வங்கத்தில் அடுத்தடுத்த நடக்கும் அதிரடிகளுக்கும், பிரச்சனைகளுக்கும் ஒரே நபர்தான் காரணம்.
Recommended Video
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் அடுத்தடுத்து நடக்கும் அதிரடிகளுக்கும், பிரச்சனைகளுக்கும் ஒரே நபர்தான் காரணம். கொல்கத்தா கமிஷனர் ராஜீவ் குமாரை கைது செய்ய போய்தான் சிபிஐக்கும், மேற்கு வங்க அரசுக்கும் பிரச்சனை உருவாகி இருக்கிறது.
வாழ்க்கை விசித்திரமானது.. ஒரு காலத்தில் மேற்கு வங்க முதல்வர் மமதாவால் மோசமாக விமர்சிக்கப்பட்டவர், தற்போது அதே மமதாவால் உலகிலேயே மிக சிறந்த போலீஸ் அதிகாரி என்று பாராட்டப்படுகிறார். ஒரு காலத்தில் மோடியால் புகழப்பட்டவர் தற்போது அதே மோடியால் கைதாகும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்.
யார் ராஜீவ் குமாரா? அவர் மறக்கவும் மாட்டார், மன்னிக்கவும் மாட்டாரே! இதுதான் 1989ல் ராஜீவ் குமாருடன் தேர்வான ஐபிஎஸ் அதிகாரிகள் அவரை குறித்து சொல்வது. இவரின் பணி வரலாறு அசரடிக்கும் வகையில் இருக்கிறது. கொல்கத்தா கமிஷ்னரான இவரை கைது செய்ய போய்தான் தற்போது சிபிஐ சிக்கலுக்கு உள்ளாகி உள்ளது.
யார் விபரம்
1989 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரிதான் இந்த ராஜீவ் குமார். உத்தர பிரதேசத்தை சேர்ந்த இவர் ஐஐடி ரூர்க்கியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் படித்துள்ளார். மேற்கு வங்கு மாநில பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியாக இவர் தேர்வானார். 1989ல் இருந்து இவர் எஸ்பி, சிறப்பு எஸ்.பி, இணை ஆணையர், எஸ்டிஎப் இணை ஆணையர், சிஐடி இயக்குனர், தற்போது கமிஷ்னர் ஆகிய பதவிகளை வகித்து இருக்கிறார்.
டெக்கி ஜாம்பவான்
ஐஐடியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் படித்தவர் என்றால் கேட்கவா வேண்டும். இவர் தற்போது இந்தியாவில் இருக்கும் மிக சிறந்த ''டெக்கி போலீஸ்களில்'' ஒருவர். இவருக்கு தெரிந்த டெக்னலாஜி வித்தைதான் தற்போது இவர் கமிஷனர் ஆக மாற்றியுள்ளது என்றால் நம்புவதற்கு சிரமமாக இருக்கும். ஆனால் உண்மை அதுதான். இவருக்கு கிடைத்த பதவி உயர்வு எல்லாம்.. இவருக்கு தெரிந்த டெக்னலாஜி காரணமாகத்தான்.
புகார் அளித்தார்
இவர் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த போது, மமதா பானர்ஜி லோக்சபா எம்பியாக இருந்தார். 2011ல் மேற்கு வங்கம் தேர்தலுக்காக தயாராகிக் கொண்டு இருந்தது. அப்போது செய்தியாளர்களை சந்தித்த மமதா பானர்ஜி, ''ஆளும் மாநில கம்யூனிஸ்ட் அரசு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரை வேவு பார்க்கிறது. ஐபிஎஸ் அதிகாரி ராஜீவ் குமாரின் உதவியுடன் இது நடக்கிறது. தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று ராஜீவ் மேல் புகார் அளித்தார்.
அப்போதே விசாரித்தார்
அப்போது மட்டுமில்லை அதற்கு பின் பல முறை ராஜீவ் குமார் மீது மமதா புகார் அளித்து இருக்கிறார். அந்த அளவிற்கு ராஜீவ் மீது மமதா கோபத்தில் இருந்தார். எந்த அளவிற்கு என்றால், 2011ல் ஆட்சிக்கு வந்த 24 மணி நேரத்தில் ராஜீவ் குமார் குறித்த அறிக்கை வேண்டும் என்று அவரின் உயர் அதிகாரிகளிடம் கேட்டார். அவரின் உயர் அதிகாரிகள் மமதாவிடம் கொடுத்த ரிப்போர்ட்டில் இருந்தது ''அவர் ஒரு எக்ஸலண்ட் ஆபிஸர்'' என்பதுதான்!
பதவி உயர்வு அளித்தது
ஆனால் அதன்பின் இவர்கள் இடையேயான பிரச்சனை கொஞ்சம் கொஞ்சமாக சரியானது. அதன்பின்தான் மேற்கு வங்கத்தில் சாரதா ஊழல் வெடித்தது. இது மாநில அரசுக்கு பிரச்சனையாகவே இதை விசாரிக்க தனி குழு அமைக்கப்பட்டது. அந்த சிறப்பு விசாரணை குழுவின் தலைவராக ராஜீவ் குமார் நியமிக்கப்பட்டு அவருக்கு மமதா பானர்ஜி ஆச்சர்யமாக பதவி உயர்வும் வழங்கினார். இந்த பிரச்சனைதான் தற்போது பூதாகரமாகி உள்ளது.
எங்கு அலுவலகம்
பொதுவாக கொல்கத்தாவில் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு தலைமை செயலகத்தில் அறை ஒதுக்க மாட்டார்கள். இதற்காக லால் பசார் என்ற இடத்தில் தனி கட்டிடம் இருக்கிறது. ஆனால் சுதந்திர இந்தியாவில் கொல்கத்தாவில் தலைமை செயலகத்தில் அறை ஒதுக்கப்பட்ட ஒரே அதிகாரி ராஜீவ்தான். அந்த அளவிற்கு இவர் மமதாவின் செல்லப்பிள்ளை. இவரின் ஆலோசனை இல்லாமல் மமதா பல முக்கிய விஷயங்களை செய்ய மாட்டார் என்கிறார்கள்.
பெரிய அளவில் உதவினார்
மிக முக்கியமாக இவர் தன்னுடைய டெக்கி மூளையை பலமுறை காட்டி மமதாவிடம் நல்ல பெயர் பெற்று இருக்கிறார். மேற்கு வங்கத்தில் இவர் அமைத்த அதி நவீன கண்காணிப்பு உபகரணங்கள் மூலம்தான் ஜங்கள் மஹாலில் இருந்த மாவோயிஸ்டுகள் கைது செய்யப்பட்டனர். இந்த கைதுதான் இதுவரை இந்தியாவில் செய்யப்பட்ட மிகப்பெரிய மாவோயிஸ்ட் எதிர்ப்பு நடவடிக்கை என்று பார்க்கப்படுகிறது.
பாஜகவிற்கு எதிராக வளர்ந்தார்
ஒரு காலத்தில் மமதாவால் திட்டப்பட்டு, பின் பாராட்டப்பட்ட இவர்தான் தற்போது அமித் ஷாவால் திட்டப்பட்டுக் கொண்டு இருக்கிறார். அதே வாசகம்தான், இவர் எங்களை கண்காணிக்கிறார், எங்கள் போனை ஒட்டு கேட்கிறார். மேற்கு வங்கத்தில் இவர் பாஜகவினரை கண்காணிக்கிறார் என்று பாஜக தேசிய தலைவர் அமித் ஷா குற்றச்சாட்டு வைத்துள்ளார். தேர்தல் ஆணையத்திலும் இவர் மீது புகாரும் இருக்கிறது.
சிபிஐ ஏன் தேடுகிறது
இவரை சிபிஐ தேட ஒரே காரணம்தான். கொல்கத்தாவை உலுக்கிய தி ரோஸ் வேலி ஊழல் மற்றும் சாரதா ஊழல் ஆகியவைதான் இந்த பிரச்சனைகளுக்கு காரணம். தி ரோஸ் வேலி ஊழலில் 15,000 கோடி ரூபாயும், சாரதா ஊழலில் 2500 கோடி ரூபாயும் மோசடி செய்யப்பட்டு இருப்பதாக சிபிஐ குற்றச்சாட்டு வைத்து இருக்கிறது. இதை விசாரித்தது ராஜீவ் குமார்தான். தற்போது இந்த வழக்கை சிபிஐ விசாரிக்கிறது.
சில ஆதாரங்கள்
இவர் இது தொடர்பான ஆவணங்களை மறைத்து வைத்து இருக்கிறார். இது தொடர்பாக சிலரை மிரட்ட பார்க்கிறார். மாநில திரிணாமுல் அரசுக்கு ஆதரவாக செயல்படுகிறார். இவர் ஏற்கனவே பறிமுதல் செய்த ஆவணங்களை அழிக்க பார்க்கிறார், உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை சிபிஐ இவர் மீது வைத்து இருக்கிறது. இதற்காக இவருக்கு சம்மன் அனுப்பி இவர் ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது.
புக் ஃபேர்
இதில் வேடிக்கை என்னவென்றால் உண்மையில் இவரும் டெல்லி செல்வதை தவிர்த்தே வந்துள்ளார். தேர்தல் ஆணையம் நடத்திய கமிஷனர்கள் சந்திப்பை கூட இவர் புறக்கணித்தார். கடைசியாக இவர் பெரிய அளவில் வெளியே வந்தது கொல்கத்தா புத்தக கண்காட்சிக்கு மட்டும்தான். இந்த நிலையில்தான் சிபிஐ அவரை கைது செய்ய சென்று, பின் நடந்தது எல்லாம் வரலாறு.