அடுத்தடுத்து பரபரப்பை கிளப்பும் ஊதிய உயர்வு... தேர்தல் ஆணையர்களின் ஊதியம் டபுள் மடங்கு உயர்ந்தது!
தேர்தல் ஆணையர்களின் ஊதியம் இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.
டெல்லி: தேர்தல் ஆணையர்களின் ஊதியம் இரு மடங்காக உயர்த்தப்பட்ட நிலையில் இந்த ஊதிய உயர்வு அடுத்தடுத்து பரபரப்பை கிளப்பி வருகிறது.
கடந்த 1-ஆம் தேதி பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட போது, ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மற்றும் எம்பிக்களின் ஊதியம் 100 சதவீதம் உயர்த்தியதாக நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார். அதன்படி ஜனாதிபதிக்கு ரூ.1.25 லட்சத்திலிருந்து ரூ. 5 லட்சமாகவும் துணை ஜனாதிபதிக்கு 1.25 லட்சத்திலிருந்து ரூ.4 லட்சமாகவும், மாநில ஆளுநர்களுக்கு ரூ. 1.1 லட்சத்திலிருந்து ரூ. 3.5 லட்சமாகவும் உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்தார்.
அதுபோல் எம்பிக்களுக்கு 1.4 லட்சத்திலிருந்து 2.3 லட்சமாக உயர்த்தப்பட்டது. அதுபோல் அவர்களின் அடிப்படை சம்பளம் ரூ. 50 ஆயிரத்திலிருந்து ரூ. 1 லட்சமாக உயர்ந்தது. தொகுதி அலவன்ஸ் ரூ.45, ஆயிரத்திலிருந்து ரூ. 70 ஆயிரமாக உயர்ந்தது.
அலுவலக உதவியாளர் மற்றும் அலுவலக செலவுகளுக்கான தொகை ரூ. 45 ஆயிரத்திலிருந்து ரூ. 60 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்பட்டது. எனினும் வாக்களித்து தேர்வு செய்ய மக்களும் பயன் பெறும் வகையில் எந்த வித நலத்திட்டங்களும் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை.
மக்களின் வரிப்பணத்தில் மக்கள் பிரதிநிதிகளின் ஊதியத்தை உயர்த்திய அரசு விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யவில்லை என்ற விமர்சனம் எழுந்தது. இந்நிலையில் கடந்த ஜனவரி 25-ஆம் தேதி உச்சதநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஊதியத்தை உயர்த்தியது.
அது போல் தற்போது தலைமை தேர்தல் ஆணையர் உள்பட இரு தேர்தல் ஆணையர்களின் ஊதியத்தையும் உயர்த்தியுள்ளது. ரூ.90 ஆயிரத்திலிருந்து ரூ.2.50 லட்சமாக உயர்த்தப்பட்டது. உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளின் உயர்த்தப்பட்ட ஊதியமும் இதுதான்.