திரையரங்குகளில் தேசிய கீதம்- கட்டாயமாக்குவதை நிறுத்த மத்திய அரசு சுப்ரீம்கோர்ட்டில் மனு
திரையரங்குகளில் தேசிய கீதத்தைக் கட்டாயமாக்குவதை நிறுத்தி வைக்க கோரியுள்ளது மத்திய அரசு.
டெல்லி: திரையரங்குகளில் தேசிய கீதம் கட்டாயமாக்கப்படுவதை நிறுத்த உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனுத் தாக்கல் செய்துள்ளது.
திரையரங்குகளில் தேசிய கீதம் இசைப்பதை கட்டாயமாக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. பொதுநலன் வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்திருந்தது.
உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் இன்று மனுவைத் தாக்கல் செய்துள்ளது. அதில், தேசிய கீதம் கட்டாயம் இசைக்கப்பட வேண்டும் என்கிற உத்தரவை மாற்ற வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது,
தேசிய கீதத்தை இசைப்பது தொடர்பான வழிமுறைகளை அமைச்சரவை குழு உருவாக்கும் வரை இதனை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும் இந்த குழுவை அமைத்து வழிமுறைகளை உருவாக்க 6 மாதங்களாகும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. தேசிய கீதம் தொடர்பான பொதுநலன் வழக்கில் நாளை விசாரணை நடைபெறும் நிலையில் இம்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.