நீட் அவசர சட்டத்துக்கு ஒப்புதல் கிடையாது...அந்தர்பல்டி அடித்த மத்திய அரசு, ஷாக்கான மாணவர்கள்!
தமிழக அரசின் நீட் அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பல்ட்டி அடித்துள்ளது.
டெல்லி: நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும் அவசர சட்டத்திற்கு ஒப்புதல் தர முடியாது என்று மத்திய அரசு கூறியுள்ளதால் நீட் தேர்வு அடிப்படையிலேயே மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
நீட் விலக்கு தொடர்பான வழக்கு ஆகஸ்ட் 17ம் தேதி உச்சநீதிமன்ற விசாரணைக்கு வந்த போது நீட் விவகாரத்தில், அரசாணையை ரத்து செய்தும், தமிழக அரசு கலந்தாய்வை நடத்தவில்லை என்றும், தமிழக அரசின் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இந்திய மருத்துவக் கவுன்சில் தரப்பில் வாதிடப்பட்டது.
அப்போது அவசர சட்டம் கொண்டு வந்தால் நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் நிலை என்ன?, என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர், தமிழக அரசின் அவசர சட்டத்திற்கு மத்திய சட்ட அமைச்சகம் ஒப்புதல் அளித்திருப்பதாகவும், வரும் இன்றைக்குள் தமிழக அரசின் "நீட்" அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்படும் என்றும், இதனால் நீதிமன்றத்தால் தடை விதிக்க முடியாது என்றும் வாதிட்டார்.
ஆனால் நீட் விலக்கு கோரும் இன்றைய வழக்கு விசாரணையின் போது மத்திய அரசு அந்தர்பல்ட்டி அடித்துள்ளது. இந்த ஆண்டு நீட் தேர்வு முடிந்து விட்டதால் தமிழகத்துக்கு விளக்கு அளிப்பது நல்ல தல்ல என்றும் ஒப்புதல் அளித்தால் தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் என்றும் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் உச்சநீதிமன்றத்தில் கூறியுள்ளார்.
தமிழகத்திற்கு மட்டும் விலக்கு அளித்தால் அது சட்டசிக்கலை ஏற்படுத்தும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த வாதத்தின் அடிப்படையில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளதோடு, செப்டம்பர் 4ம் தேதிக்குள் மருத்துவ கலந்தாய்வை நடத்த உத்தரவிட்டுள்ளது.
நீட் தேர்வில் இருந்து ஓராண்டுக்கு விலக்கு அளிக்க வாய்ப்புள்ளதாக கடந்த வாரம் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கூறியதையடுத்து, அடுத்த நாளே அவசரச் சட்டத்தை தமிழக அரசு மத்திய அரசிடம் தாக்கல் செய்தது. கடந்த வாரம் வரை விலக்கு தந்துவிடுவோம் என்று ஆசை காட்டிவிட்டு இன்று அவசர சட்டத்திற்கு ஒப்புதல் தர முடியாது என்று மத்திய அரசு கைவிரித்துள்ளது மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.