ராஜஸ்தானுக்கு மத்திய அரசு வழங்கிய வென்டிலேட்டர்களில் பழுது.. விசாரணை நடத்த முதல்வர் அதிரடி கோரிக்கை
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்திற்கு பழுதான வென்டிலேட்டர்களை மத்திய அரசு வங்கியதாக ராஜஸ்தான் அரசு குற்றம் சாட்டியுள்ளது. பிரதமரின், பிஎம் கேர்ஸ் நிதி மூலம் இப்படியான வென்டிலேட்டர் வாங்கப்பட்டுள்ளது. எனவே இது குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் முழுமையாக விசாரிக்க வேண்டும் என்று, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கேட்டுக் கொண்டுள்ளார்.
அசோக் கெலாட் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: "பி.எம் கேர்ஸ் நிதியிலிருந்து 1,900 வென்டிலேட்டர்களை மத்திய அரசு, ராஜஸ்தான் மாநிலத்திற்கு அனுப்பியது. இந்த வென்டிலேட்டர்களை நிறுவுவதற்கும் பராமரிப்பதற்கும் பொறுப்பேற்றது. ஆனால் மருத்துவர்களின் கருத்துப்படி, இந்த வென்டிலேட்டர்களில் பலவற்றில் தொழில்நுட்ப குறைபாடுகள் உள்ளன. இதனால் அவற்றைப் பயன்படுத்துவது ஆபத்தானது.
இந்த வென்டிலேட்டர்களில் பிரஷர் டிராப் சிக்கல் இருப்பதாக மருத்துவர்கள் சொன்னார்கள். இந்த வென்டிலேட்டர்கள் தொடர்ந்து 1-2 மணி நேரம் வேலை செய்தபின் ஆப் ஆகும். PIO2 திடீரென குறைதல், ஆக்ஸிஜன் சென்சார் மற்றும் கம்ப்ரசர் செயலிழப்பு போன்ற பிரச்சினைகள் உள்ளன.
பிற மாநிலங்கள்
உதய்பூர் மருத்துவக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் லகன் போஸ்வால் ஏப்ரல் 5ம் தேதி நடைபெற்ற கோவிட் மறுஆய்வுக் கூட்டத்தில் இந்த வென்டிலேட்டர்கள் பிரச்சினையையும் எழுப்பியிருந்தார். மத்தியப் பிரதேசம், பஞ்சாப், மகாராஷ்டிரா மற்றும் குஜராத் போன்ற மாநிலங்களிலும் வென்டிலேட்டர்களில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டதாக செய்தி ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
கடிதங்கள்
இந்த வென்டிலேட்டர்களின் பிரச்சினை குறித்து மத்திய அரசுக்கு தெரியப்படுத்தவும், அவற்றை விரைவாக சரிசெய்யவும் ராஜஸ்தான் அரசால் செயலாளர் மட்டத்தில் இரண்டு கடிதங்களும், அமைச்சர் மட்டத்தில் ஒரு கடிதமும் மையத்திற்கு எழுதப்பட்டது.
அனுபவம் இல்லை
ராஜஸ்தானில் உள்ள அனைத்து வென்டிலேட்டர்களின் பராமரிப்பிற்காக, 11 தொழில்நுட்ப வல்லுநர்களை அனுப்புவதாக மத்திய அரசு கூறியிருந்தது. ஆனால் 6 பேர் மட்டுமே இங்கு பணிபுரிகின்றனர். வென்டிலேட்டர்களை சரிசெய்ய அவர்கள் முயன்றனர், ஆனால் அனுபவம் இல்லாததால், அதை சரிசெய்ய முடியவில்லை. இதனால், மருத்துவர்கள் திருப்தி அடையவில்லை.
விசாரணை
இது போல குறைபாடுள்ள வென்டிலேட்டர்களை வழங்குவது நோயாளிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என்பதால், இந்த வென்டிலேட்டர்கள் எவ்வாறு வாங்கப்பட்டன என்பதை மத்திய சுகாதார அமைச்சகம் விசாரிக்க வேண்டும். இவ்வாறு அசோக் கெலாட் கூறியுள்ளார்.