பாஜக., காங்கிரஸை கழட்டி விட்டு, மீண்டும் சந்திரபாபு நாயுடு - சந்திரசேகர ராவ் கட்சிகள் கூட்டணி?
பாஜக., காங்கிரஸை கழட்டி விட்டு மீண்டும் இருமாநில சட்டசபை தேர்தலில் நாயுடு - ராவ் கூட்டணி இணையவிருக்கிறது.
ஹைதராபாத் : ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலத்தில் சந்திரசேகர ராவ் மற்றும் சந்திரபாபு நாயுடு ஆகியோர் வருகிற லோக்சபா தேர்தல், இரு மாநில சட்டசபை தேர்தலுக்கு கூட்டணி அமைக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
ஆந்திர மாநிலத்தில் ஆட்சி செய்து வரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு, பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறும் முடிவை எடுத்துள்ளார்.
இந்நிலையில், அடுத்து வருகிற 2019ம் லோக்சபா தேர்தல் மற்றும் தெலுங்கானா சட்டசபைத் தேர்தல் ஆகியவற்றில் தெலுங்கானாவின் சந்திரசேகர் ராவுடன் இணைந்து தேர்தலை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மத்திய ஆளும் பா.ஜ.வுடன் கூட்டணி வைத்துள்ள ஆந்திராவின் தெலுங்கு தேசம் கட்சி முதல்வர் சந்திரபாபுநாயடு, கூட்டணியில் இருந்து வெளியேறும் முடிவில் உள்ளார்.
இதுகுறித்து ஹைதராபாத்தில் நடந்த நிர்வாகிகள் மாநாட்டில் சந்திரபாபு நாயுடு பேசுகையில், இதுவரை நாம் பா.ஜ.க கூட்டணியில் இருந்து நம்மை மத்திய அரசு புறக்கணித்துவிட்டது. ஏற்கனவே காங்கிரஸ் நமக்கு அநீதி இழைத்து இருக்கிறது என்று குறிப்பிட்டார்.
மேலும், இனியும் தேசியக் கட்சிகளை நம்பிப் பயனில்லை. எனவே, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமீதி கட்சியுடன் இணைந்து இனிவரும் தேர்தல்களை சந்திக்கலாம் என்று சூசகமாகத் தெரிவித்துள்ளார்.
இந்த கூட்டணி கடந்த 2009ம் ஆண்டு தேர்தலில் ஏற்கனவே அமைந்தது. தற்போது மீண்டும் 10 ஆண்டுகளுக்குப் பிறகு இவர்கள் இணைய உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.