பாஜகவுக்கு ஓட்டுப் போட்டதை பகிரங்கமாக சொன்ன சந்திரபாபு நாயுடு வாக்கு பறி போகிறது?
ஹைதராபாத்: பாஜகவுக்கு ஓட்டுபோட்டதாக பத்திரிகையாளர்களிடம் தெரிவித்த ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் வாக்கு ரத்து செய்யப்பட உள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளது தெலுங்கு தேசம். இன்று தெலுங்கானா பகுதியில் நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒன்றாக நடைபெற்றது.
இதில் செகந்திராபாத் மக்களவை மற்றும் கைரதாபாத் சட்டசபை தொகுதிக்குட்பட்ட ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில், தெலுங்கு தேசம் தலைவரும் முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு வாக்களித்தார். அவருடன் மனைவி மகன் மற்றும் மருமகளும் இதே வாக்குச்சாவடியில் வாக்களித்தனர்.
பிறகு நிருபர்களிடம் பேசுகையில் நாடாளுமன்றம் மற்றும் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவில் நாங்கள் (குடும்பத்தினர்) பாஜகவுக்குதான் வாக்களித்தோம் என்று தெரிவித்தார்.
இதுகுறித்து மாநில தலைமை தேர்தல் அதிகாரி பன்வர்லால் கூறுகையில்: யாராக இருந்தாலும் வாக்களித்த ரகசியத்தை காப்பாற்ற வேண்டும். அல்லது அது தேர்தல் நடத்தை விதிமீறலாகத்தான் பார்க்கப்படும். கைரதாபாத் சட்டசபை தொகுதிக்கான தேர்தல் அதிகாரியிடம் இதுகுறித்து அறிக்கை கேட்டுள்ளேன். தவறு இருப்பது தெரியவந்தால் சந்திரபாபு நாயுடுவின் வாக்கு நீக்கப்படும் என்றார்.
இதனிடையே, செய்தியாளர்களிடம் பேசிய நாயுடு, வாக்குப்பதிவு மையத்திலிருந்து 100 மீட்டர் தூரம் தள்ளி வந்துதான் நான் பேட்டியளித்தேன். எனவே இது தேர்தல் விதிமுறை மீறலாகாது என்றார்.